“ஈழப்பெண்கள் எழுச்சி நாள்”
கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 10.10.2019
உன்னதர்கள் நாளாம் இந்நாள்
ஐப்பசித் திங்கள் பத்து
மண் வீரம் காத்து
முதல் மறப் பெண்ணாய்
மண்ணிலே காவியமாகிய
புரட்சிப் பெண் மாலதியின்
எழுச்சி நாள் இன்று
ஈழப்பெண்கள் எழுச்சி தினமாகியதே !
முதல் வீர மறப் பெண்ணாய்
புதுநானூறு படைத்த புரட்சிப் பெண்ணாய்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
விடியலின் சுடராய்
வீறு கொண்டு எழுந்து
வீரத்தோடு போரிட்டு
மண்ணிலே வித்தாகிய நாள்
பெண்ணினம் விழித்த நாள் !
மண்ணுக்குள் விதையான
உன்னதர்கள் வரிசையிலே
பெண்ணுக்குள் இவளே முதல் மாதரசி
மண்ணின் மலர்வினையும்
பெண்ணின் விடிவினையும்
கண்ணாக எதிர் கொண்டாள்
கனவோடு புறப்பட்டாள்
களமாடி மடிந்தாளே !
அரசியலில் அங்கம் வகிக்கவும்
அடக்குமுறைகளை உடைக்கவும்
உரிமைகளைப் பெறவும்
தலைநிமிர்ந்து வாழ்வதற்கும்
அடி நாதமாய் விளங்கியது
ஈழப் பெண்கள் எழுச்சியே
எழுச்சிக்கு அத்திவாரமிட்டாள்
உன்னதப் புரட்சிப்பெண் மாலதி !
ஆண்டுகள் முப்பத்தியிரண்டு
கடந்த போதும் மாலதியின் வீரம்
மாண்புடனே நினைவாகி
வரலாற்றுப் பெட்டகமாகி
காவியமாய் மிளிர்கிறதே
இன்று ஈழப்பெண்கள் எழுச்சி தினமாக !
கவியாக்கம்: ரஜனி அன்ரன் (B.A) 10.10.2019