Main Menu

“ தந்தையெனும் தியாகி “ 13.05.2021 (தந்தையர் தினத்திற்கான சிறப்புக்கவி)

தந்தை எனும் தியாகி
தன்னலமற்ற யோகி
திரியாகி ஒளிதரும் ஜோதி
எமக்காக வாழ்ந்த ஜீவன்
எம்முயிர்த் தோழன்
தந்தையர் நாடாம் ஜேர்மனியில்
தந்தையர் தினமாம் இன்று
சிந்தையில் நிறுத்துகிறேன் நானும் !

உயிர் அணுவின் வரமாக
உயிர்ப்பின் வேதமாக
உழைப்பின் உரமாக
முதல் எழுத்தின் நாதமாக
முனைப்பின் மூலாதாரமாக
குதூகலமாய் நாம் வாழ
குடும்ப பாரம் தாங்கிய
எந்தையின் நினைவுகள்
சிந்தையில் தவழுதே !

பாரத்தை மனதில் பூட்டி
பாசத்தை எமக்குக் காட்டி
பரிவோடு அணைத்த தெய்வம்
மதிப்பிட முடியாத வெகுமதி
விலை மதிப்பில்லாத பொக்கிஷம்
மூன்றெழுத்து மந்திரம் தந்தையே !

கரம் கோர்த்து நடந்து
கல்வி பயில வைத்து
உலகைப் புரிய வைத்த
உன்னத தந்தையை – எம்
ஆழுமைகளை ஆற்றல்களைப்
பார்க்கு முன்னே
அழைத்தானே காலனும் விரைந்து
அகவை நாற்பதிலே !

தந்தையெனும் தியாகிக்குள்
விந்தைகளோ பற்பல
பாசம் நேசம் தியாகம் என
அத்தனையும் நிறைந்திருக்கும்
அர்த்தங்களும் பல இருக்கும்
அதிசயமான புத்தகம் தந்தையே
எந்தையின் நினைவுகள்
என்றும் சிந்தையில் நிழலாடுமே !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...