Main Menu

வணக்கத்திற்குரிய கலாநிதி தாவீது அடிகளார்(நினைவுக்கவி)

தும்பளையில் பிறந்து
சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்று
சிறந்த தமிழ் அறிஞராய் ஆசானாய்
சொற்பிறப்பியல் ஆய்வாளராய்
பன்மொழி வித்தகராய்
கன்னித்தமிழை நேசித்தாரே
வணக்கத்திற்குரிய தாவீது அடிகளார் !

அறிவுப் பொக்கிஷமாய்
ஆதார சுருதியாய் விளங்கிய
யாழ் பொதுசன நூலகம்
அனலுக்குள் பொசுங்கியதை
சென் பற்றீஸ் கல்லூரியின் மாடியில்
நேரடியாகவே பார்த்த போது
சோகம் தாங்காது ஆனித்திங்கள் இரண்டில்
தன்னுயிரை விட்டாரே தாவீது அடிகளார் !

உயிருக்கு மேலான தமிழுக்கு
ஊறு ஒன்று வந்த போது
உயிர் சுமக்க முடியாமல்
தன்னுயிரை விட்டாரே
தாவீது அடிகளார் தமிழுக்கு !

யாழ் நூலக எரிப்பு
எம் அடையாளத்தின் அழிப்பு
அழியாத நினைவுகள்
ஆண்டு தோறும் வரும் போது
தாவீது அடிகளாரும்
எம் நினைவலைகளில்
வந்து போவாரே !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 02.06.2021

பகிரவும்...