Main Menu

“ தந்தை செல்வா “ (நினைவுக்கவி) 26.04.2021

தாய்த்தேசத்தின் தந்தை
தந்தை செல்வா
தமிழர்களின் நல்லாயனாக
தவமென அவதரித்து
தமிழரசுக் கட்சியையும் ஆரம்பித்து
தமிழருக்காகவே சேவை செய்தாரே !

இருள் படர்ந்த ஈழத்து வானில்
உதயசூரியனாய் ஒளி தந்தவர்
தந்தை செல்வா
சிதறிக் கிடந்த மக்களை
சிங்காரமாய் ஒற்றுமைப்படுத்தி
தன்னம்பிக்கையோடு வாழ வழிகாட்டியவர்
தந்தை செல்வா
சித்திரைத் திங்கள் இருபத்தியாறில்
இவ்வுலகை விட்டு ஏகினாரே !

ஒடுக்கப்பட்ட மக்களுக்காய்
ஓங்கிக் குரல் கொடுத்து
அறப் போராட்டங்களை
நீதியோடு போராடி
மக்களுக்கு அச்சாணியாய்
நின்று செயற்பட்டாரே !

ஆசிரியராக இருந்து
சட்டக் கல்லூரியில்
சட்டமும் பயின்று
வழக்கறிஞராக இருந்த போதும்
எம்மினத்திற்காக உழைத்து
ஆற்றுப் படுத்தினார் மக்களை !

மக்களைக் கடவுள் தான்
காப்பாற்ற வேண்டுமென
ஆதங்கத்தோடு
அன்றே சொல்லி வைத்தார்
நாமும் நினைவு கூருவோம்
தந்தை செல்வாவை
சித்திரைத் திங்கள் 26இனிலே !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...