Main Menu

கலையரசு சொர்ணலிங்கம் ஐயாவின் நினைவுக்கவி (26/07/2021)

ஆனைக்கோட்டையில் பிறந்து
சென் ஜோண்ஸ் கல்லூரியில் கல்விபயின்று
நாடக சங்கம் ஒன்றை நிறுவி
நாடகங்கள் பலதையும் மேடையேற்றி
நாடக நடிகராய் ஆசிரியராய் கடமையாற்றி
காப்புறுதித் தொழிலையும் ஏற்றாரே !

நவீன நாடகத்தின் தந்தையாகி
கலைக்காகவே வாழ்ந்து
கலையோடு தன்வாழ்வையும் முடித்தாரே
கலையரசு சொர்ணலிங்கம் ஐயா
ஆடித் திங்கள் இருபத்தியாறினிலே !

நடிப்பின் நுட்பங்களை
நயமாகக் கையாண்டு
நாடக இயலை மெருகேற்றி
ஈழத்து நாடகக் கலையை
நிரந்தரமாய் அங்கீகாரமாக்கினாரே !

நாடக பாத்திரங்கள் பலதையும் ஏற்று
நயமாகவே நடிக்கும் திறமையாளன்
நாடகங்கள் பலதையும் மேடையேற்றி
சரித்திர நாடகங்கள் இலக்கிய நாடகங்களென
பாடசாலை மட்டங்களிலும் மேடையேற்றி
ஈழத்தின் நாடகத் துறைக்கு
அரும்பணியும் ஆற்றினாரே !

நாடகமே பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு
நடிப்பின் முன்னோடியாகவும் செயற்பட்டு
நாடக வாரிசுகள் பலரையும் உருவாக்கி
நாடகக் கலைக்கு அடித்தளமும் இட்டு
நவீன நாடகத்தின் தந்தையாகி
ஆடித்திங்கள் இருபத்தியாறினிலே
இவ்வுலகை விட்டு ஏகினாரே
கலையரசு சொர்ணலிங்கம் ஐயா !

கவியாக்கம்…ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...