Main Menu

பாடும் நிலாவே ! (அஞ்சலிக்கவி)

இராகங்களால் தாலாட்டி
இசையால் எமைக் கட்டிப் போட்டு
இசையுலகின் இமயமாய் நின்று
இசைப் பாக்களையும்
இராகங்கள் பதினாறையும்
இசைத்த பாடும் நிலா
இடை நிறுத்தியதே தன் மூச்சுக்காற்றை
இன்னும் நம்ப முடியவில்லையே !

அரை நூற்றாண்டுகளாய்
இசை மீட்டிய இசைக்குயில்
ஆறுமுறை தேசீய விருதுகள் பெற்று
தலைமுறைகள் நான்கோடு பயணித்து
நாற்பதினாயிரம் பாடல்களைப் பாடி
கின்னஸ் சாதனை படைத்த பாடும்நிலா
நிலாவைத் தேடிப் புறப்பட்டதோ விண்ணுக்கு !

பாடும்நிலா ஒரு சகாப்தம்
பாடலில் கண்டார் சரிதம்
பாடகனாய் நடிகனாய்
இசையமைப்பாளனாய் தயாரிப்பாளராய்
பன்முகத் திறமையோடு
வானம்பாடியாய் வட்டமிட்டு
கானம் இசைத்த இசைக்குயில்
வானுலகம் சென்றதுவோ
விண்ணிலிருந்து கானம் இசைக்க !

மங்காத காந்தக் குரலும்
மனித நேயமும்
கர்வம் இல்லாக் குழந்தைத்தனமும்
குழைந்து பாடும் இனிமைக் குரலும்
கொண்ட பாடும்நிலா
பறந்து சென்றதே எமைவிட்டு !

இசைக்கு உயிர் கொடுத்த
இசைக்குயில் ஒன்று
இசையுலகை வலம்வந்து
வட்டமிட்ட பாடும்நிலா ஒன்று
எமை விட்டு விட்டுச் சென்றதுவே
வானுலக வாழ்விற்கு !

வண்ணம் கொண்ட நிலவை
வான் நிலாவின் அழகை
வெண்நிலாவை இளையநிலாவை
இசையால் எழிலூட்டிய பாடும்நிலா
ஒட்டு மொத்த உலகையும்
கண்ணீர் கடலில் மிதக்கவிட்டு
மீளாத்துயில் கொண்டதுவே !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...