Main Menu

“உயிர்நேயம்“ (மனித உரிமை தினத்திற்கான சிறப்புக்கவி)

மானிட வாழ்வின் உரிமை பேணி
மானிட உரிமையைக் காத்திடவே
மனிதத்தைப் போற்றிடும் திங்களாக
மார்கழித் திங்கள் பத்தினை
மனித உரிமை தினமாக்கியதே ஐ.நா.வும் !

மனிதத்தின் மேன்மையே மனிதநேயம்
மனிதநேயத்தை மிஞ்சியது உயிர்நேயம்
அன்பு பண்பு பாசம் கொண்டு
உயிர்களிடம் நேசம் கொண்டு
பொதுநலத்தோடு செயற்பட்டு
உயிர்நேயம் காத்திடுவோம் !

வீதியில் விழுந்தோரை
வேதனையில் துடிப்போரை
விரக்தியில் இருப்போரை
வேடிக்கை பாராது
கை தூக்கி விடுவோம்
கரம் கொடுத்து உதவுவோம் !

வாடிய பயிரைக் கண்டே
வாடி வதங்கினாராம் வள்ளலார்
வாழும் காலத்திலேயே
வாடிய உயிர்களை நேயத்தோடு
வாரி அணைத்திடுவோம்
வலிகளைப் போக்கி
வழியொன்று காட்டிடுவோம் !

மனிதநேயம் மாந்தருக்கு அழகு
உயிர்நேயம் உலகிற்கே அழகு
விலகட்டும் வர்க்க பேதங்கள்
பூக்கட்டும் புன்னகைப் பூக்கள்
புலரட்டும் புத்தொளி
பரவட்டும் காருண்ணியம்
மலரட்டும் இதயங்களில் மனிதநேயம்
மறவாது காப்போம் உயிர்நேயம் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 12.12.2019

பகிரவும்...