Main Menu

குடியுரிமை சட்டத் திருத்த வரைபு மடமைத் தனமானது: இளம் இந்தியா இதை மாற்றும் – கமல்

இந்தியாவை ஒருசாரர் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமையானது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்கள் பலிக்க இது பாமர இந்தியா அல்ல எனத் தெரிவித்துள்ள அவர், இளம் இந்தியா விரைந்து குடியுரிமை சட்ட வரைபு போன்ற திட்டங்களை நிராகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்புச் சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது. ஆனால் பிழை இல்லாத நல் அமைப்பைத் திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகமே.

நோயில்லா மனிதனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்திற்கு நிகரானது இன்று மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும். இந்தியாவை ஒருசாரர் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை.

இளம் இந்தியா விரைந்து இது போன்ற திட்டங்களை நிராகரிக்கும். எங்கள் தாய் நாட்டை தந்தையர் நாடாக மாற்ற முயலும் பிதா மகான்களுக்கு இது புரிய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்த வரைபை மத்திய அரசு மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இந்த வரைபு முஸ்லிம்களுக்கு விரோதமானது எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த வரைபை இன்று மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். இதுதொடர்பாக எதிர்க் கட்சிகள் அவையில் கடுமை வாதத்தை முன்வைத்துள்ளனர்.

பகிரவும்...