Main Menu

TRT தமிழ் ஒலியின் 23 வது பிறந்தநாள் வாழ்த்துக்கவி

மங்கலம் பொங்க
மனங்கள் நிறைய
தைத்திங்கள் பதினான்கு
தொண்ணூற்றி ஏழில்
வந்து உதித்தாய்
ஆண்டுகள் இருபத்தியிரண்டும்
தாண்டியதே விரைவாய்
ஆனாலும் தொடர்ந்து
பயணிக்கிறேன் உன்னோடு நானும் !

தாய்மண்ணை விட்டு
புலம் பெயர்ந்து வந்தபோது
உற்ற தோழியாய்
உறவாடி மகிழ்ந்தவளே
காற்றலையூடாய் தமிழ்மணத்தை
மாற்றான் தேசத்தில்
தவழவிட்ட தமிழ் ஒலித்தாயே
வாழ்த்துகிறோம் உன்னை
வாழ்க பல்லாண்டு !

அள்ள அள்ளக் குறையாத
அட்சய பாத்திரம் நீ
அறிவுப் பசிக்கு விருந்து தந்து
ஆழுமைகளை வளர்த்தவள் நீ
ஆற்றல்களை ஊக்குவித்து
ஆர்வத்தை ஊட்டியவள் நீ
அள்ளிச் சொரிகின்றோம்
அன்போடு வாழ்த்துக்களை
வாழ்க பல்லாண்டு !

இதயத்து ஒலி நீ
இமயத்து நிழல் நீ
உதயத்து ஆதவன் நீ
உண்மையின் நிதர்சனம் நீ
எட்டுத் திக்கும் மெட்டுப் போட்டு
எம்மைக் கட்டிப் போட்டவள் நீ
வாழ்த்துகிறோம் வாழ்க பல்லாண்டு !

தெள்ளு தமிழோடு
தெம்மாங்கு சுவையோடு
சமூகப் பணியோடு
அரசியல் ஆய்வோடு
அறிவுத் திறனோடு
எண்ணற்ற நிகழ்வாய் வலம் வருவாயே
ஏற்றமுடன் வாழ்த்துகின்றோம்
வாழ்க பல்லாண்டு !

உன்னால் தமிழ் வாழும்
தமிழ் மூச்சாய் நாம் வாழ்வோம்
வாழியவே பல்லாண்டு – நீ
வாழியவே பல்லாண்டு !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன்(B.A)

பகிரவும்...