Main Menu

“ மருத்துவ சேவைக்கு நன்றி “ (24.03.2020)

உயிர்கொல்லியின் தாக்கம்
ஒட்டு மொத்த உலகத்தையும்
உறைய வைத்துள்ளது பீதியில்
மக்களெல்லாம் வீட்டிற்குள் முடக்கம்
பிள்ளைகள் எல்லாம் கணணிக்குள் அடக்கம்
மாய்கிறது மருத்துவ உலகம் !

எல்லையைத் தாண்டுகிறது மரணம்
கிருமியோடு போராடுது மருத்துவம்
ஓய்வு ஒழிச்சலின்றி பணிகளில் கவனம்
உயிர்களைக் காப்பாற்ற துடிக்கும் ஆர்வம்
மருத்துவப் பணியாளர்களின் மனிதாபிமானம்
மனதை நெகிழ வைக்குது
மனம் திறந்து நன்றி பகிர்கின்றோம் !

விண்வெளிக்கு செல்பவர்கள் போல்
முகத்தை மூடி கைகள் மூடி
உடையணிந்து உறக்கம் தொலைத்து
வியர்வையிலும் வெந்து
உயிர்களைக் காப்பாற்றும்
உன்னதர்களே உமக்கு நன்றி !

உலகையே புரட்டிப் போட்ட
வல்லரசுகளையே நடுங்க வைத்த
நச்சுக் கிருமியை அழிக்க
எஞ்சிய மக்களைக் காக்க
நாளும் பொழுதும்
போராடும் உங்களை
நன்றியோடு நினைக்கிறோம் !

உங்கள் அர்ப்பணிப்பும் தியாகமும்
உயிர் காக்கும் மனித நேயமும்
உணர்வோடு ஒன்றித்த பணிகளுக்கும்
நன்றி என்ற வார்த்தையை
நவில்கின்றோம் உமக்கு
உலகமே கைதட்டி மகிழ்ந்தது உமக்கு
நன்றி நன்றி !

பகிரவும்...