Main Menu

பாட்டுக்கு ஒருபுலவன் பாரதி ! (நினைவுக்கவி)

அடிமைத் தனத்தை வேரோடு சாய்க்க
பெண்ணடிமை முறையை அடியோடு ஒழிக்க
சமூக சீர்கேடுகளைக் களைந்து எறிய
சாதிமதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க
மூடக் கொள்கைகளைத் தகர்த்தெறிய
பிறந்தது ஒருபுரட்சிக்கவி எட்டயபுரத்திலே !

கன்னித் தமிழ் அமுதை கச்சிதமாய் வடித்து
மெச்சும்படி கவி வடிவம் கொடுத்து
தேசீயக்கவிகள் சிந்துக்கவிகள் யாத்து
தாய்மொழியை தாய்நாட்டின் விடுதலையை
சுதந்திரதாகத்தை அணிசேர்த்தார் கவியினிலே !

அறியாமை இருளை அறவே போக்கி
ஆங்கில மோகத்தை அடியோடு நீக்கி
தாய்மொழிப் பற்றை தாராளமாய் ஊட்டி
தாயக சுதந்திர கீதங்களைப் பாடிய
பாட்டுக்கு ஒருபுலவன் புரட்டாதி 11 இல்
நிரந்தர விடுதலை பெற்றாரே உலகைவிட்டு !

கவியாக்கம்……….ரஜனி அன்ரன் (B.A) 11,09,2018

பகிரவும்...