Main Menu

நண்பனுக்கோர் கடிதம்

உறவுகளின் அடைப்புக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன்

சுற்றிலும் வேலிகளாய் மனிதர்

 

வேலி தகர்ப்பு இந்தியத்தெருக்களில்

என் புதிய அத்தியாயங்களுக்காய்

நண்பர்கள் வந்தனர்

இப்படித்தான் நீயும் நானும்

சந்தித்துக்கொண்டோம்

 

பல வேடிக்கை கதைகள் பேசினோம்

ஈழவிடுதலையும் ரஸ்சியாவில் இருந்து

அமெரிக்காவையும் அலசித்தொலைத்தோம்

கற்பனைத் தொலைநோக்கியில்

அண்டங்களின் அறியாத முகங்களை

அறிய முற்பட்டோம்

 

போயின நண்பனே யாவும்

காலம் கொடிது வாழ்வின் துயர்களை

மீண்டும் எமக்குள் புதைத்துக்கொள்ள

திசைதப்பிய புலம் பெயர் பறவையாய்

நீயும் நானும் எங்கோ தொலைந்தோம்

 

மீண்டும் ஒருமுறை

சில மாற்றங்களுடன் நானும் நீயும்

தொலைந்துவிட்ட மகிழ்ச்சியுமாய்

புதிய அத்தியாயங்களுக்காய் காத்திருக்கிறோம்

பேசுவதற்காக அகதி வாழ்வு

இலக்கியம் இனவாதம் தமிழ்

பண்பாடு என்று விடிந்துசெல்லும்

 

மீள்வோம் நண்பனே !

வானத்தின் எல்லைகளை

தொடுவதற்காய் முறிந்துவிட்ட

சிறகுகளை பழுதுபார்ப்போம்

 

– மாலியன்

பகிரவும்...