Main Menu

“ தேசமறவர் எழுச்சி வாரம் “ (21.11.2019)

கார்த்திகைத் திங்கள் இருபத்தியொன்று
எம் தேசமறவர் எழுச்சி வாரம்
போர்க்கால மேகங்கள்
புடை சூழ்ந்த வேளையிலே
கார்கால மேகங்களாய்
கரிகாலன் வழி நின்று
களமாடிச் சமராடி களப்பலியான
வீர மறவர்களை நினைத்திடும் வாரமிது !

தேசத்திற்காய் தேசீயத்திற்காய்
தம்முயிரை ஆகுதியாக்கிய தீரர்களை
அறப்போர் புரிந்த மறவர்களை
புது நானூறு படைத்திட்ட வீரர்களை
புதுப்பரணி பாடிய காவிய சீலர்களை
நினைவேந்தும் வாரமிது !

காற்றிலும் மழையிலும்
சேற்றிலும் சகதியிலும்
செந்தணலாகி வெஞ்சமர் புரிந்த
சந்தண மேனியரை
சமராடிய சரித்திர நாயகர்களை
வேதனையோடு நினைத்திடும் வாரமிது !

சத்திய வேள்வியில்
நித்தியமாகிய தியாக சீலர்களே
நித்திலம் மீது உங்கள் நினைவும்
நினைவழியாக் காவியங்களே
தேசக் காற்றில் உங்கள் மூச்சும்
விம்மித் தெறிக்கிறது
தேச மைந்தர் எழுச்சி வாரமும்
முகாரியை இசைக்கிறதே !

தேசத்தில் விதையான நேசர்களே
தேச உரிமைக்காய் வித்தானீர்களே
கார்காலம் உங்களுக்காய் வருகிறது
கார்முகிலும் தோகையை விரிக்கிறது
கார்மேகம் மழையினைப் பொழிகிறது
கார்த்திகைத் திங்களும் மலர்கிறது !

காந்தள் பூக்களும் பூக்கிறது
காவியப் பாடலும் ஒலிக்கிறது
காது கொடுத்துக் கேட்பீரோ ?
கண்மணிகளே உங்கள் எழுச்சி வாரமிது
கண்களைத் திறந்து பார்ப்பீரோ ?
ஒருமுறையாவது பார்ப்பீரோ ?

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...