Main Menu

நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றி பெற்றுள்ளளர் : தம்மரத்தன நாயக்க தேரர்

நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றிபெற்றுள்ளதாக சங்கைக்குரிய பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரர் தெரிவித்தார்.

சவால்களுக்கு பயப்படாத ஜனாதிபதிக்கு நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளது என்று குறிப்பிட்ட தேரர், அதற்காக பொறுமையுடன் ஜனாதிபதிக்கு காலத்தையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (24) பிற்பகல் பெல்லன்வில ரஜமகா விகாரைக்குச் சென்று விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். இதன்போது விசேட அனுசாசன உரையொன்றை நிகழ்த்தும்போதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாரஹேன்பிட அபய ராமாதிபதி சங்கைக்குரிய முடுத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்ததுடன், அவர்களும் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர்.

இதேநேரம் ஜனாதிபதி இன்று (24) பிற்பகல் பெபிலியான சுனேத்ராதேவி பிரிவெனா விகாரைக்குச் சென்று விகாராதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரை சந்தித்தார்.

தேரர் அவர்களும் விசேட அனுசாசன உரையொன்றை நிகழ்த்தியதுடன், நாட்டில் மாற்றம் ஒன்றுக்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டினை பலப்படுத்துவதற்கு மகாசங்கத்தினரது முழுமையான ஒத்துழைப்பும் ஆசிர்வாதமும் கிடைக்குமென குறிப்பிட்டார்.

புலமை வாய்ந்தவர்களையும் துறை சார்ந்தவர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கும் மகாசங்கத்தினரது முழுமையான ஒத்துழைப்பு உள்ளதென்றும் தேரர் குறிப்பிட்டார்.

தேசிய புலமைத்துவ பிக்கு சங்கத்தின் தேரர்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்ததுடன், அவர்களும் ஜனாதிபதிக்கு தமது ஆசிர்வாதங்களை தெரிவித்தனர்.

பகிரவும்...