Main Menu

“ குறள் அமுதம் “

ஐயன் வள்ளுவன் ஆக்கிய அமுதம்
ஐயம் தவிர்த்த தமிழ் வேதம்
ஐந்தாம் வேதமாய் அரசாளுது
ஐரோப்பிய மொழிகளிலும் தவளுது
உலகப் பொதுமறையாகி உலா வருகுது
அகில உலகிலும் அமுதமாய் மிளிருது !

அன்புநெறி புகட்டும் அரியதோர் பொக்கிஷம்
அஞ்ஞானம் விளக்கும் ஞானக் களஞ்சியம்
ஈரடியால் உலகை அளந்த குறளமுதம்
செம்மொழித் தொகுப்புக்களின் சாரம்
பொதுமை கூறும் கலைக்காவியம்
ஐயன் வள்ளுவன் ஆக்கிய குறளமுதம் !

குறள் வெண்பாவால் ஆகிய காவியம்
அற, ஆசாரங்களைப் புகட்டும் ஓவியம்
அறிஞர்களை உரை எழுதத்தூண்டிய அதிசயம்
நெறியோடு வாழ வழிகாட்டும் தத்துவம்
இன,மத,மொழி, கடந்த இலக்கியம்
இல்வாழ்விற்கு வழி காட்டும் வழிகாட்டி !

முற்பகுதி முற்றிலுமே தத்துவம் பேசும்
இரண்டாம் பகுதி அரசியலை இடித்துரைக்கும்
இறுதிப்பகுதி கற்பனைச் சிறகுவிரித்து
காதல் மொழி பேசும்
காவியமாய் மிளிரும் !

மொத்தத்தில் வாழ்வியலை வண்ணமாக்கி
வாழ்வையே படம் பிடிக்கும்
வாழ்வாங்கு வாழ வழிகாட்டி நிற்கும்
ஐயன் வள்ளுவன் ஆக்கிய குறளமுதம்
ஐயம் தவிர்த்த தமிழ் வேதம் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 07,02,2019

பகிரவும்...