Main Menu

எங்கே போவேன்?

அப்பான்னு நினச்சேன்
அசிங்கமாய்த் தொட்டான்

சகோதரன்னு பழகினேன்
சங்கடப்படுதினான்..
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்…
உறவுகள் அனைத்தும்
உறவாடவே அழைக்கின்றது..

பாதுகாப்பை நாடி
பள்ளிக்குச் சென்றேன்
ஆசிரியனும் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண் குறையுமென்றான்..

நட்புக் கரமொன்று
நண்பனாய்த் தலைகோதி
தூங்கென்றான்
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
மயங்கித் தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான்..
அவனும் ஆண்தானே!

கதறி அழ
கடவுளைச் சரணடைந்தேன்
ஆறுதலாய்த் தொட்டுத்தடவி
ஆண்டவன் துணையென்றான்
சாமியாரும்…!

அலறி அடித்து ஓடுகின்றேன்
எங்கேபோவேன்?
சமத்துவம் வந்ததென
சத்தமாய்க் கூவுகின்றனர் பெண்ணை
பெண்ணாய் பாராமல்
மனிதராய் பார்க்கும் நாள்
எந்நாளோ?

பாவிகளின் பாலியல்
வன்முறை எப்போது ஓயுமோ?

-ஹரன் தணிகை-

பகிரவும்...