Main Menu

“இயேசு பாலன்”(24.12.2020)

பரிசுத்த ஆவியின் ஒளியினிலே
மரியன்னை வயிற்றினிலே
மனுக்குலத்தை இரட்சிக்க
மானிடரை நேசிக்க
துன்பங்களைப் போக்கிட
துயரங்களை விலக்கிட
பாலனாய் வந்தாரே !

வானத்து விண்மீனொன்று
மண்ணுக்கு வந்து
மன்னுலகை மீட்கப் பிறந்தது
மாட்டுத் தொழுவத்திலே
மார்கழித் திங்கள் இருபத்தி ஐந்திலே !

அன்பினை உலகிற்கு எடுத்துச் செல்ல
அனைத்து உயிர்களையும் மதித்திட
பாவங்களைப் போக்கிட
ஏழைகளைக் காத்திட
மீண்டும் பிறந்தாரே
பாலன் இயேசுவாய் !

நித்திய வாழ்வினை
சத்தியம் ஆக்கிட
உத்தமர் யேசு
தேவ கட்டளைகளோடு
தத்துவ ஞானியாய்
உதித்தார் மண்ணிலே !

பாலன் யேசு பிறப்பு
கிறிஸ்மஸ் விழாவாக
நம்பிக்கையின் விழாவாக
மகிழ்ச்சியின் விழாவாக
மனிதநேயம் மலர
மண்ணில் மகிமை பெறுகிறதே !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...