Main Menu

மன்னகுளம் “வள்ளுவர்” முன்பள்ளி அடிக்கல் நாட்டும்வைபவம்

அரசியல் தீர்வையும், மனிதாபிமான அடிப்படையிலான அபிவிருத்தியையும் நடைமுறைப்படுத்தும் இதயசுத்தியை, மகிந்த அரசிடம் எதிர்பார்க்கவே முடியாது! – சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு.

பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலி நேயர்களின் நிதி பங்களிப்பில், வவுனியா கனகராயன்குளம் மன்னகுளம் “வள்ளுவர்” முன்பள்ளி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

போர் முடிவடைந்து கடந்த ஐந்து வருடங்கலாக, “இனப்பிரச்சனைக்கு தமிழர் தரப்பால் ஏற்றுக்கொள்ளக்கூடிய காத்திரமான அரசியல் தீர்வு, தமிழர் பகுதிகளில் மனிதாபிமான அடிப்படையிலான அபிவிருத்தி பணிகள்” இவ்விரண்டையும் நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமுகமும், தமிழ் தேசியக்கூட்டமைப்பும், தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் சிறீலங்கா அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தியும், எமது வலியுறுத்தல்களை, அழுத்தமான கோரிக்கைகளை உதாசீனப்படுத்தியதால், எங்கெல்லாம் சென்றால் எமக்கு நீதி கிடைக்குமோ, அங்கெல்லாம் செல்ல வேண்டிய நிலையில் தமிழர்கள் நாங்கள் உள்ளோம்.

இந்த உத்தியின் ஒரு அங்கமாகவே ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா கூட்டத்தொடரை நாங்கள் கையாளுகின்றோம். மனித உரிமைகளையும், மனித மாண்பு விழுமியங்களையும் மதிக்கின்ற, அது தொடர்பில் கவனிப்புடன் செயலாற்றுகின்ற, அக்கறை கொள்ளுகின்ற உலக கனவான்கள் கூடுகின்ற ஒரு பொது இடத்தில், கருத்துச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், ஊடக சுதந்திரம், தகவல் அறியும் சுதந்திரம் உள்ளிட்ட தனி மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் நிலை பற்றியும், மனித உரிமைகளை பேணல், பாதுகாத்தல் என்பன தொடர்பில் எவ்வித முன்னேற்றங்களையும், நல்லெண்ண சமிஞ்ஞைகளையும் வெளிப்படுத்தாத சிறீலங்கா அரசு பற்றியும், சுட்டிக்காட்டுவது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என நாம் பெரிதும் நம்புகின்றோம்.

போர் முடிவுக்கு பின்னர் இரண்டு முக்கிய பெரும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இந்த அரசுக்கு இருந்தது. ஒன்று: நிரந்தர அரசியல் தீர்வு, மற்றொன்று: போரால் பாதிக்கப்பட்டோருக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கல். இவ்விரண்டு பொறுப்புகளிலிருந்தும் வழுவி, கால இழுத்தடிப்புகளையும், இன்றும் கூட தப்புக்கு மேல் தப்புகளையும் செய்து கொண்டிருக்கும் இந்த அரசிடம், இனியும் விமோசனத்தை எதிர்பார்க்க முடியாது என்பதாலேயே எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு விடையத்தில் சர்வதேச தலையீடுகளை கோருகின்றோம். சர்வதேச சமுகத்தின் ஒத்துழைப்போடு எமக்கு காத்திரமான நீதி கிடைக்கும் என்பதில் நீங்கள் எல்லோரும் என்றும் போலவே தளராத நம்பிக்கையோடு இருங்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி, அதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை, மின்சார வசதிகள், வீட்டுக்குடிமனை வசதிகள், தொழில் வாய்ப்புகள் இல்லாமை, என்று பல்வேறு அடிப்படை பிரச்சினைகளோடும், மனித உயிர் வாழ்தலுக்கு தேவையான அத்தியாவசிய வளங்கள் குறைபாடுகளோடும் மன்னகுளம், குஞ்சுகுளம், கொல்லர்புளியங்குளம், பெரியகுளம் கிராம மக்கள் நீங்கள் வாழ்வதை காணுகின்றோம்.

உங்கள் இடர்களை களைந்து, வாழ்க்கைத்தரத்தில் மேம்பாடுகளை காணச்செய்ய நாமும் புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. புலத்திலிருந்து கிடைக்கின்ற உதவிகள் போதாது என்ற போதிலும், அவர்கள் உங்கள் வாழ்க்கைத்தரம் தொடர்பில் மிகவும் கரிசனையோடு இருக்கிறார்கள். இந்த மண்ணில் நிகழ்த்தப்பட்ட மனிதகுலப்படுகொலைகளுக்கு நீதி கேட்டு நடை பயணம் செய்து கொண்டும், மறுபுறம் தம் உழைப்பின் ஒரு பகுதியை இன்று ரீ.ஆர்.ரீ வானொலி நிறுவனத்தினூடாக தந்துதவியிருக்கிறார்கள்.

ரீ.ஆர்.ரீ வானொலி நிறுவனத்தின் நிதி பங்களிப்போடு ஏற்கனவே மன்னார் முசலி காயாகுடியிருப்பிலும், வவுனியா வடக்கு மரையடித்தகுளத்திலும் இரண்டு முன்பள்ளிகள் முழுமையாக கட்டப்பட்டு பொதுத்தேவைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. அண்மையில் புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் முதியோர் இல்லத்துக்கும், இன்று வள்ளுவர் முன்பள்ளிக்கும் அடிக்கல்கள் நாட்டப்பட்டுள்ளன. இதைவிடவும், போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகள், வாழ்வாதாரத்துக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகள், விசேட தேவைக்குட்பட்டோருக்கான உதவிகள் என்று பல்வேறு உதவிகளை செய்து கொண்டிருக்கும் ரீ.ஆர்.ரீ வானொலிக்கும், அதன் நேயர்களுக்கும் எமது மக்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதாகவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

கட்டட வசதியின்றியும், அடிப்படை வசதிகளின்றியும் மாற்று இடம் ஒன்றில் இயங்கி வரும் வவுனியா கனகராயன்குளம் மன்னகுளம் வள்ளுவர் முன்பள்ளி கட்டடத்துக்கு, பிரான்ஸ் ரீ.ஆர்.ரீ வானொலி நிறுவனத்தினதும், அதன் நேயர்களினதும் நிதிப்பங்களிப்பில் அடிக்கல் நாட்டும் வைபவம், வடமாகாணசபை உறுப்பினர் தியாகராஜாவின் ஒழுங்கமைப்பில், கொல்லர்புளியங்குளம் அ.த.க.பாடசாலை அதிபர் ஜெயபாலசிங்கம் தலைமையில் இன்று (22.03.2014) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதாரதுறை அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் வைத்தியகலாநிதி சி.சிவமோகன், இந்திரராசா, தியாகராஜா, லிங்கநாதன், நெடுங்கேணி பிரதேச செயலர் பரந்தாமன், நெடுங்கேணி பிரதேசசபை தவிசாளர் பாலசுப்பிரமணியம், உறுப்பினர் ஜெயரூபன், வவுனியா வடக்கு முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி அருளம்பலம் விநாயகமூர்த்தி, வவுனியா வடக்கு முன்பள்ளி உதவி கல்விப்பணிப்பாளர் ராஜேஸ்வரன், கனகராயன்குளம் கிராம சேவையாளர் திருமதி பிரதீபா, முன்பள்ளி ஆசிரியர் அனுஜா, கிராமத்தின் மூத்த பிரஜை கார்த்திகேசு வெற்றிவேல் ஆகியோரும், குஞ்சுகுளம், கொல்லர்புளியங்குளம், பெரியகுளம் கிராமங்களின் கிராம-மாதர் அபிவிருத்திச்சங்கங்களும், மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

9072570 8894415 9275329 9815034 4381099 3346001 4030164 7718554

பகிரவும்...