தாறுமாறாக எகிறும் AI செலவுகள்: ஒரே மாதத்தில் 500 மில்லியன் டொலர் கட்டணம்
பணியிட செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை அன்றாட பணிகளுக்கு ஏஐ பயன்படுத்துமாறு ஊக்குவித்து வருகின்றன. ஆனால், இந்த அதீத நம்பகத்தன்மை நிறுவனங்களுக்கு எதிர்பாராத வகையில் இமாலயச் செலவுகளைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
ஆக்ஸியோஸ் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிறுவனம் ஒன்று ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் ‘கிளாட் ஏஐ’ (Claude AI) அசிஸ்டெண்ட்டைப் பயன்படுத்தியதற்காக, ஒரே மாதத்தில் மட்டும் சுமார் 500 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் 4,100 கோடிக்கும் மேல்) கட்டணம் வந்துள்ளதாக ஏஐ ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் கணக்குகளுக்கு முறையான பயன்பாட்டு வரம்புகளை அந்த நிறுவனம் விதிக்கத் தவறியதே இந்த பிரம்மாண்ட தொகைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான ஏஐ தளங்கள் ‘டோக்கன்’ முறையிலேயே கட்டணம் வசூலிக்கின்றன.
நிறுவனங்கள் ஊழியர்களுக்காக வழக்கமான சந்தா தொகையைச் செலுத்தினாலும், ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டிப் பயன்படுத்தும்போது கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும்.
ஏஐ மாடல்கள் கையாளும் உரை அல்லது செயலாக்கத்தின் அளவைக் கணக்கிட இந்த டோக்கன்கள் பயன்படுகின்றன. பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க செலவும் ராக்கெட் வேகத்தில் உயரும்.
குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரம்பை விட மிக அதிகமாக ஏஐ பயன்படுத்தியிருக்கலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
நிறுவனங்கள் தங்களின் ஏஐ பயன்பாட்டை விரிவுபடுத்தும்போது, அதன் நீண்டகாலச் செலவுகள் குறித்த கவலை இப்போது உலகளவில் எழுந்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஏஐ பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.
செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தனது கிளாட் கோட் உரிமங்களில் பெரும்பாலானவற்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தி வருவதாக தி வெர்ஜ் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பிரபல சவாரி சேவை நிறுவனமான ஊபர், தனது ஓராண்டிற்கான ஏஐ பட்ஜெட்டை வெறும் நான்கு மாதங்களிலேயே முழுமையாகப் பயன்படுத்தித் தீர்த்துவிட்டதாக முன்னரே தெரிவித்து அதிர்ச்சியூட்டியது.
இயக்கச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏஐ தொழில்நுட்பத்தை பெரிய அளவில் தொடர்ந்து பயன்படுத்துவது நிதி ரீதியாகச் சாத்தியமா என்ற கேள்வியை நிறுவனங்கள் எழுப்பத் தொடங்கியுள்ளன.
இந்த விவாதம் ஏஐ துறைத் தலைவர்களின் மத்தியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளைக்காலர் வேலைகளை ஏஐ முற்றிலும் மாற்றி அமைக்கும் என்று முன்பு தீவிரமாகக் கணித்தவர்கள், இப்போது தங்களின் தொனியை சற்றே குறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
