ஈரான் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் : உலக சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், ஈரானின் தெற்குப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட புதிய தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
ஈரானின் முக்கிய தெற்குத் துறைமுக நகரான பண்டார் அப்பாஸ் இலக்கு வைக்கப்பட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள், எண்ணெய் வர்த்தகர்கள் மத்தியில் மீண்டும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
ஆசிய சந்தையின் ஆரம்பகால வர்த்தகத்தில் பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலை 2 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதன்படி, பீப்பாய் ஒன்றின் விலை 1.40 டொலர்கள் அல்லது 1.5 சதவீதம் உயர்ந்து 97.56 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் விலை சற்றே உயர்ந்து பீப்பாய் ஒன்று 91.25 அமெரிக்க டொலர்களாகப் வர்த்தகமாகிறது. எனினும், இது கடந்த வெள்ளிக்கிழமை சந்தை நிறைவடைந்த விலையுடன் ஒப்பிடுகையில் 5.30 டொலர்கள் அல்லது 5.5 சதவீத வீழ்ச்சியாகும்.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று மிக விரைவில் எட்டப்படலாம் என்ற உலகளாவிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த வர்த்தக அமர்வில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமான அளவு (7 சதவீதம் வரை) வீழ்ச்சியடைந்திருந்தன.
இருப்பினும், பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நீடிக்கின்ற போதிலும், களத்தில் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட புதிய வான்வழித் தாக்குதல்கள், எண்ணெய் விநியோகச் சங்கிலியில் மீண்டும் ஒரு முடக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
