திருமதி மங்கையற்கரசி அவர்களின் நிதி உதவியில் இயற்கையால் பாதிக்கப்பட்ட கன்னாட்டி மக்களுக்கு உலர்உணவு வழங்கிவைப்பு!
இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்டு அனாதரவான நிலையில் வாழ்ந்துவருகின்ற வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கன்னாட்டி கிராமத்தினைச் சேர்ந்த அறுபது குடும்பங்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் திருமதி மங்கயற்கரசி என்பவரின் ஏற்பாட்டில் உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்தவாரம் ஏற்பட்ட புயல் மற்றும் மழையினால் கன்னாட்டி கிராமத்தினைச் சேர்ந்த அறுபது குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தன.
குறித்த குடும்பங்களுக்கென ரி.ஆர்.ரி வானொலியின் சமூகப்பணியின் ஒழுங்குபடுத்தலில் சுவிஸ் வாழ் புலம்பெயர் உறவான திருமதி மங்கயற்கரசி அவர்களின் நிதிப்பங்களிப்பில் உலர்உணவுகள் வழங்கப்பட்டன.
பொருட்களை வவுனியா தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளருமான கதிர்காமு பரமேஸ்வரன் (பாபு) வழங்கிவைத்தார்.
கடந்தவாரம் மக்கள் இடம்பெயர்ந்தவுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சிவமோகன், இந்திரராஜா, தியாகராஜா ஆகியோர் மக்களை நேரடியாச் சென்று பார்வையிட்டு அவர்களின் நிலையினை வெளிப்படுத்தியதன் பலனாகவே இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த மக்கள் ஏற்கனவே அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த உதவிக்காக மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினர்களும் தெரிவித்தனர்.