Main Menu

ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குரலாகவும் இருக்கும் பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும் – சிறீதரன்

ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் நெருக்கமாக இருப்பவரும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குரலாகவும் இருக்கும் பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைந்து எமக்காக அதே கம்பீரத்துடன் மீள குரல் கொடுக்கவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொரோனா தொற்றால் பாதிப்புள்ளாகி சிகிச்சை பெற்று வரும் உலகத்தமிழர் பேரவையின் தலைவரும் தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவருமான பழ.நெடுமாறன் விரைவில் குணமடைய வேண்டும் என கிளிநொச்சி வாழ் தமிழ் உறவுகளால் விசேட வழிபாடுகள் கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுள்ளது.

குறித்த பூஜையின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சிறீதரன்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசுகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக தமிழகத்தில் சாத்வீக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் பழ நெடுமாறன். அவ்வாறு போராட்டங்களில் ஈடுபடும் போது பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பின்னர் எல்லாம் அஞ்சாது ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த மனிதர் அவர். ஒருமுறை இலங்கைக்கு வருகை தந்து  விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தன்மையை ஈழத்தமிழர்களுக்கும் தமிழகம் சென்று தமிழக மக்களுக்கும் உணர்த்தியவர் ஆவார்.

ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் நெருக்கமாக இருப்பவரும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குரலாகவும் இருக்கும் பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைந்து எமக்காக அதே கம்பீரத்துடன் மீள குரல் கொடுக்கவேண்டும் எனவும் நாம் ஈழத்திலிருந்து பிரார்த்திக்கிறோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...