Main Menu

இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை தொலைநோக்குடன் இலங்கை அணுகும் –  தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

தென்னிந்திய உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய இந்திய துறைமுகங்களை பயன்படுத்துவதை விட இலங்கையின் துறைமுகங்களை பயன்படுத்தினால் பொருளாதார ரீதியில் தென்னிந்தியாவுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, இந்தியா உடனான நேரடி நில ரீதியான இணைப்பை தொலைநோக்குடன் இலங்கை அனுகுவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் சமகால பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்தீரமான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீள்புதுப்பிக்கதாக்க வலுசக்தி பயன்பாடுகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டும். மறுபுறம் ஆசியா மாத்திரமன்றி உலக பொருளாதாரத்தின் கேந்திர நிலையத்திற்கான வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்.

இதற்கு நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களையும் நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தி செய்ய வேண்டும். கொழும்பு துறைமுகத்தின் தென் முனையத்தில் தான் கூடுதல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களிலும் முக்கிய துறைமுக செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. இவற்றை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வது அவசியம்.

அப்போதுதான் இந்தியாவுக்கு செல்லும் சர்வதேச சரக்கு கப்பல்களின் பண்ட பரிமாற்ற நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொள்ள முடியும். 

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலுடன் சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகரித்தன. இது இலங்கைக்கு நன்மையாகியது. இந்தியாவுடனான  இணைப்புகள் குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் கட்டுவதனூடாக நில ரீதியான நேரடி இணைப்பு ஏற்படுகிறது. இந்த இணைப்பின் ஊடாக இலங்கை எவ்வாறு நன்மை அடைய முடியும் என்ற தொலைநோக்கு பார்வை எமக்கு இருக்க வேண்டும். குறிப்பாக, தென்னிந்தியாவின் உற்பத்திகளின் ஏற்றுமதியில் இலங்கை துறைமுகங்கள் பயனடைய முடியும். குறிப்பாக கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை தென்னிந்தியா தமது ஏற்றுமதிகளுக்காக பயன்படுத்த முடியும். இந்திய துறைமுகங்களை பயன்படுத்துவதை விட பொருளாதார ரீதியில் தென்னிந்தியாவுக்கு நன்மையளிக்கும்.

இவ்வாறான திட்டங்களினால் இலங்கைக்கு தொழில் வாய்ப்பு ரீதியான நன்மைகள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதே போன்று உற்பத்தி பொருளாதாரத்திலும் இலங்கை கூடிய கவனம் செலுத்த வேண்டியதுள்ளது. புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளை கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. கனிய வளங்களை ஏற்றுமதி செய்யும் போது மூலப்பொருட்களாக அல்லாது முடிவுப்பொருட்களாக ஏற்றுமதி செய்ய வேண்டும். இதற்காக பல சர்வதேச நிறுவனங்களின் தொழிற்சாலைகளை உள்நாட்டில் நிர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயம் உள்ளிட்ட அனைத்து உற்பத்திகளையும் தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கும் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். இதனை மையப்படுத்தியதாகவே எமது நிலையான பொருளாதார அபிவிருத்தி திட்டம் உள்ளது என்றார்.

பகிரவும்...