அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – இறுதி நாள் வாக்குப்பதிவு இன்று
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் இறுதி நாள் வாக்குப்பதிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே 9.5 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில், இறுதி நாள் வாக்குப்பதிவுகள் இன்று இடம்பெறவுள்ளன.
இம“முறை தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் தேர்தல் திகதிக்கு முன்பே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியுள்ளது.
அதன்படி ஒவ்வொரு தேர்தலின் போதும் கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களித்து விடுவது வழக்கம்.
கொரோனா பரவல் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு, தேர்தலுக்கு முன்னதாகவே அஞ்சல் மூலமாகவும் வாக்குச்சாவடிக்கு சென்றும் பொதுமக்கள் வாக்களித்து வந்தனர்.
அந்த வகையில், 9 கோடியே 50 இலட்சத்து 27 ஆயிரத்து 832 அமெரிக்கர்கள் தேர்தலுக்கு முன்பாகவே வாக்களித்துள்ளனர்.
இவற்றில் நேரில் சென்று வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்து 76 ஆயிரத்து 166 ஆகவும் இணையம் வழியே வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 6 கோடியே 4 இலட்சத்து 51 ஆயிரத்து 666 ஆகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் மக்கள் நேரில் சென்று வாக்களித்த எண்ணிக்கையைவிட இணையம் வழியே வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளமை குறிப்பிடத்தக்கது.