Main Menu

நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 19பேர் உயிரிழப்;பு- 60க்கும் மேற்பட்டோர் காயம்

நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த தீவிபத்து நகர வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் தீவிபத்துகளில் ஒன்றாகும்.

பிரான்க்ஸில் உள்ள 19 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அருகிலுள்ள பாடசாலையின் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் ஒன்பது பேர் 16 அல்லது அதற்கு குறைவான வயதுடையவர்கள் என்று மேயர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான தகவல் எதுவும் தெரியாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிலடெல்பியா ரவுஹவுஸில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு குழந்தைகள் உட்பட 12பேர் உயிரிழந்த சில தினங்களில், நியூயோர்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பகிரவும்...