Main Menu

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவத்தால் ஆளப்படும் மியன்மாரில், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலைநகர் நெய்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல் தடைசெய்யப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது மற்றும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

நோபல் பரிசு பெற்ற 76 வயதான ஆங் சான் சூகி மீது வாக்காளர் மோசடி உள்ளிட்ட குற்றவியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுக்கிறார் மற்றும் உரிமைக் குழுக்கள் நீதிமன்ற விசாரணைகளை ஒரு போலித்தனமாக கண்டித்துள்ளன.

மியன்மாரில் ஜனநாயக சின்னமாக மதிக்கப்படும் சூகியை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைப்பதை உறுதி செய்வதற்காக இராணுவ ஆட்சியால் குற்றச்சாட்டுகள் பொய்யாக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

சிவில் உரிமைகள் மற்றும் ஜனநாயகக் குழுக்களும், ஐ.நா.வும் சட்ட நடவடிக்கைகளை ஒரு கேலிக்கூத்தாகக் கண்டித்துள்ளன. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனை போலி குற்றச்சாட்டுகள் என்று கூறியுள்ளது.

மியன்மாரின் இராணுவ ஆட்சி இத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. சூகி இதுவரை நியாயமான விசாரணைகள் மற்றும் சரியான சட்ட நடைமுறைகளைப் பெற்றுள்ளார் என்று கூறியது.

சூகி இன்னும் 10 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சில மதிப்பீடுகளின்படி, அவர் 190 ஆண்டுகளுக்கும் மேலான மொத்த சிறைத்தண்டனையை எதிர்கொள்வார்.

இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த பெப்ரவரி மாதம், வாக்கி- டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டில் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்த தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

பர்மா என்றும் அழைக்கப்படும் மியன்மாரில் கடந்த பெப்ரவரியில் இராணுவம் வன்முறையில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் பொதுத் தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு இந்த ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுது.

இந்த வெற்றியில் வாக்காளர் மோசடி செய்ததாக இராணுவம் குற்றம் சாட்டியது. இருப்பினும் சுதந்திரமான தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல்கள் பெரும்பாலும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்ததாகக் கூறினர்.

ஆட்சிக்கவிழ்ப்பு பரவலான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. இது மியன்மார் இராணுவம் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டியது.

அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் (பர்மா) கருத்துப்படி, எதிர்ப்பின் மீதான இராணுவத்தின் ஒடுக்குமுறையில் கிட்டத்தட்ட 1,800பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பகிரவும்...