Main Menu

மக்கள் நிதியில் நகை வாங்கிய ஜனாதிபதியின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் முன்னாள் குடியரசு தலைவரின் மனைவி ரோசா எலினா பொனிலாவுக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

52 வயதான பொனிலா தனது கணவர் போர்ஃப்ரி ஒ லுபோ பதவியில் இருந்த நான்கு ஆண்டுகளில் சர்வதேச நன்கொடை மற்றும் மக்கள் நிதியிலிருந்து 7,79,000 டொலர் மோசடி செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பொனிலா இந்த பணத்தை நகைகள் வாங்கவும் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தவும் தன்னுடைய குழந்தைகளின் கல்விச் செலவுகளை மேற்கொள்ளவும் பயன்படுத்திக்கொண்டார் எனக் குற்றம்சாட்டினார்.

அதேவேளை, பொனிலாவின் தரப்பு வழக்கறிஞர் அவர், நிரபராதி எனவும் மேல் முறையீடு செய்வோம் எனவும் வாதாடியிருந்தார்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரியில் மக்கள் பணத்தில் மோசடி செய்த வழக்கு விசாரணையில் பொனிலா கைதானார். ஏழை குழந்தைகளுக்கு காலணி வழங்குவதற்கான ஒதுக்கீட்டில் அவர் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில், பொனிலாவின் உதவியாளர் சால் எஸ்கோபாருக்கும் 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட போது பொனிலாவோ அவரது கணவரோ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொனிலா இந்த குடும்பத்தில் தண்டணை பெற்ற முதல் நபர் இல்லை. இதற்கு முன் போர்ஃப்ரி ஒ லுபோவின் முதல் மகன் ஃபாபியோ அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தியதற்காக 24 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.

பகிரவும்...