Main Menu

காஸாவில் மனிதாபிமானப் பணியாளர்கள் கொலை: இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரினார்

காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளை, இத்தாக்குதல்  ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் திங்கட்கிழமை (01) நடத்திய தாக்குதலால் தனது  ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் எனும் தொண்டு நிறுவனம் நேற்று தெரிவித்தது. 

இதையடுத்து காஸாவில் தனது பணிகளை இடைநிறுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா, போலந்து, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களுடன்; அமெரிக்க கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் மற்றும் பலஸ்தீனியர் ஒருவர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஹேர்ஸி ஹலேவி தெரிவித்துள்ளார்.

‘இச்சம்பவம் ஒரு கடுமையான தவறு. அது நடந்திருக்கக் கூடாது’ என அவர் கூறியுள்ளார். 

இதேவேளை, இத்தாக்குதல் தொடர்பான தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்கும் மன்னிப்பு கோருவதற்காகவும் வேர்;ல்ட் சென்ட்ரல் கிச்சன் நிறுவனத்தின் தலைவர் ஜோஸ் அன்;ரெஸுடன் தான் உரையாடியதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹேர்ஸோக் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதல்ல என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளார். எனினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. இது ஒரு துயர சம்பவம் எனக் கூறியுள்ள அவர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளார். பொதுமக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொண்டு நிவாரண ஊழியர்களை பாதுகாப்பதற்கான போதிய நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்ளவில்லை எனவும் பைடன் கூறியுள்ளார்.  

இச்சம்பவத்தை கண்டித்துள்ள ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ், இந்த யுத்தத்தில் மனிதாபிமானப் பணியாளர்கள் 196 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தின் அவசியத்தை இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது எனவும் அவர் கூறியுள்ளார். 

பகிரவும்...