Main Menu

விமானிகளின் பணிப் புறக்கணிப்பால் பிரிட்டிஷ் எயார் வேய்ஸ் விமான சேவைகள் அனைத்தும் ரத்து!

பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் நிறுவனத்தின் விமானிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானிகள் வேதனப் பிரச்சினையை முன்வைத்து இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அதன்படி இன்று விமானங்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்ட போதும், விமானிகள் சமரசமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானிகளில் பெரும்பாலானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் நிறுவனம், அனைத்து விமான போக்குவரத்துகளையும் இன்று ரத்து செய்துள்ளது.

பல மாதங்களாக வேதன கொடுப்பனவு பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டதாகவும், தற்போது போராட்டத்தினால் பயணிகள் பாதிக்கப்பட்டமைக்கு வருந்துவதாகவும் பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“விமானிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் தயாராக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் விமானிகளின் விவரம் குறித்து அவர்களின் சங்கத்திடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

எத்தனை பேர் பணிக்கு வருவார்கள்? எந்த விமானத்தை இயக்கும் அளவுக்கு அவர்கள் பயிற்சி பெற்றவர்கள்? என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வேறு வழியின்றி 100 சதவீத விமானங்களையும் ரத்து செய்துள்ளோம்” என பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பகிரவும்...