Main Menu

புதுவை சிறுமி கொலை வழக்கு! முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி

புதுவை சிறுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு எழுந்தது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2ஆம் தேதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த சிறுமியை காணவில்லை. பெற்றோரும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் சிறுமியை இன்னும் காணவில்லை என்பதால் அக்கம்பக்கம் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி எங்கோ நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து ரயில்நிலையம், பேருந்து நிலையம், உள்ளிட்ட இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனாலும் சிறுமி குறித்து எந்த துப்பும் துலங்கவில்லை. 4 நாட்களாகியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை என கூறி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்காலில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மூட்டையை திறந்து பார்த்த போது சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த சிறுமியின் உடலை ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து முதல்வர் ரங்கசாமி கொடுத்த பல்வேறு உத்தரவாதங்களை ஏற்ற பிறகு சிறுமியின் உடலை பெற்றோர் வாங்கிக் கொண்டனர். அவரது உடல் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) சோலை நகரில் உள்ள சிறுமியின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவருடைய உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் அவருடைய உடல் இன்று ஊர்வலமாக வீட்டிலிருந்து வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோயில் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருடைய உடலானது அவருக்கு பிடித்த பொம்மைகள், பள்ளி நோட்டு புத்தகங்கள், பிடித்த ஆடைகளுடன் வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விவேகானந்தன் (59), கருணாஸ் (19) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கருணாஸ் சிறுமிக்கு ஐஸ்கிரீம் கொடுப்பதாக கூறி அவரை விவேகானந்தனின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் கஞ்சா போதையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போது அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே சிறுமியை கொன்று முதியவரின் வேட்டியில் மூட்டை கட்டி சாக்கு பையில் வைத்து கால்வாயில் வீசிவிட்டனர். இந்த நிலையில் கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் காலாப்பட்டு சிறையில் 14 நாட்களுக்கு அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இருவரையும் மற்ற கைதிகளுடன் அடைத்தால் அவர்கள் இவர்களை தாக்கக் கூடும் என்பதால் இருவரையும் தனிச் சிறையில் அடைத்தனர். அப்போது விவேகானந்தன் தான் அணிந்திருந்த சட்டையை வைத்து கழுத்தை நெரித்து தற்கொலை முயற்சி செய்ய முயற்சித்துள்ளார். உடனே அங்கிருந்த கருணாஸ் சப்தம் போட்டதுடன் வார்டன் ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றினார். மேலும் இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்றும் எச்சரித்தார். இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது.

பகிரவும்...