Main Menu

இலங்கை கடற்படை மீது பாஜகவும், காங்கிரஸும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – கச்சத்தீவு விவகாரத்தில் பழ.நெடுமாறன் கேள்வி

கச்சத்தீவு பற்றி பேசும் பாஜகவும் காங்கிரஸும், மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து விளக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடலில் செல்லும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்களைத் தாக்கி கொள்ளையடிக்கும் சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து இக்கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் இந்திய கடற்படை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்கு அமெரிக்க அரசு உட்பட பல நாட்டு அரசுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும்தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுத் தள்ளுகிறது. ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு போவது போல, நமது மீனவர்களைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள்.

நமது மீனவர்களுக்கு சொந்தமான இயந்திரப் படகுகள், மீன்வலைகள் போன்றவை பறிமுதலும், சேதமும் செய்யப்படுகின்றன. மீனவர்கள் பிடித்த மீன்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. 1983-ம் ஆண்டில் இருந்து கடந்த 40 ஆண்டு காலமாக எவ்வித அச்சமுமில்லாமல் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை வேட்டையாடி வருகிறது. ஆனால், அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்திய கடற்படை இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ராமேசுவரத்துக்கு அருகிலுள்ள மண்டபத்தில் இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. கடற்படையோ, கடலோரக் காவல்படையோ இதுவரை இலங்கை கடற்படைக்கு எதிராக ஒரு சிறுநடவடிக்கைகூட எடுக்கவில்லை.

தயங்குவது ஏன்?: எங்கேயோ இருக்கிற சோமாலியா நாட்டுக் கடற்கொள்ளையர்களிடம் இருந்து உலக நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்தியக் கடற்படை, இலங்கை கொள்ளையர்களிடம் இருந்து நமது மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யத் தயங்குவது ஏன்?

கச்சத் தீவு பிரச்சினையில் பாஜகவும், காங்கிரஸும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் அத்துமீறி நமது மீனவர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் இதுவரை முன்வராதது ஏன் என்பதுகுறித்து மக்களிடம் இரு கட்சிகளும் விளக்க வேண்டும்.

பகிரவும்...