Main Menu

ராஜிவ் காந்தி கொலை வழக்கு.. ஒரே வாரத்தில் இலங்கை செல்லும் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்?

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் சாந்தன் இலங்கைத் தமிழர். அவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிலையில், பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் கடந்த 2022ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் சாந்தன் இலங்கைத் தமிழர் என்பதால் அவர் திருச்சியில் சிறப்பு முகாமில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சாந்தன் அங்கிருந்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதியிருந்தார். அதில் கடந்த 32 வருடங்களாகத் தனது தாயாரைப் பார்க்கவில்லை என்றும் தாயின் முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும், ஒரு மகனாக உதவிகரமாக இருக்க ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவர்களுக்கு இலங்கை தூதரகம் தற்காலிக பாஸ்போட் வழங்கி இருந்தது. அவர் விரைவில் இலங்கை செல்வார் என்று எதிர்பார்க்கக்பபடுகிறது.

அதேபோல முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்கப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என்பதால், தனக்கு உரிய அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும், மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். இன்னும் ஒரு வாரத்தில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறு அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனக் கூறினார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இலங்கை தூதரகத்தால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

பகிரவும்...