Main Menu

பயணத்தடை: விரக்தி மற்றும் அவமானம் ஆகியவற்றினால் இருவர் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் துன்ப நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு பயணத்தடை காரணமாக  வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே, தவறான முடிவை எடுத்து நேற்று முன்தினம், (ஞாயிற்றுக்கிழமை) தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

‘கடலுணவுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் இவர்,  நிதி நிறுவனம் ஒன்றிடம் குத்தகைக் கட்டணத்தில் வாகனத்தை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் பயணத்தடை காரணமாக அவரது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்துமாறு நிதி நிறுவனம் அவரை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.

இதனால் குறித்த  நிதி நிறுவன அலுவலகர்கள் அவரை ஏசியுள்ளனர். இதனால் மன விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை பயணத்தடையினால் வீட்டுக்குள் தொடர்ந்து முடங்கிக் கிடந்த ஒருவரும் மன விரக்தியில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

வதிரி கரவெட்டியைச் சேர்ந்த கோபசிங்கம் மயூரதன் (வயது-36) என்பவரே,  குறித்த சம்பவத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்  சில தொற்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததுடன்  தினமும் ஆலயங்கள், ஊர்கள், வெளிமாவட்டங்கள் என மோட்டார் சைக்கிளில் பயணித்து வருபவர் என்பது  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பயணத்தடை காரணமாக தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதால், தற்கொலை செய்யப் போவதாக கூறி வந்ததாக சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையான விசாரணையில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரின் சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...