Main Menu

“என் மனைவிக்கு நடந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கும் நேரக்கூடாது” இளம் தாயின் கணவர் நீதிக்காக கோரிக்கை

எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்’ தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும் ஒரிஜினல் மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த இளம் தாயின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்மையில் டெங்கு நோயினால் இளந்தாய் ஒருவர் பிள்ளையினை பிரசவித்த பின்னர் உயிரிழந்ததாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பில் உயிரிழந்த குடும்பத்தினர் மட்டு.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தினார்கள்.இதன்போது கருத்து தெரிவித்த குறித்த இளம்பெண்ணின் கணவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
‘தனது மனைவியின் பிரசவத்தின் போது நேர்ந்த மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என மட்டக்களப்பு ஊடக மையத்தில் கண்ணீருடன் கணவர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

உயிரிழந்த ஜெயப்பிரியா என்ற பெண்ணின் கணவர் மதுர அந்தகன், தனது மனைவிக்கு நேர்ந்த மருத்துவத் தவறுகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையற்ற போக்கு குறித்து ஊடகங்கள் வாயிலாக நீதி கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளே தனியார் துறையில் தங்களைக் கவனித்து வந்த மகப்பேற்று மருத்துவரான டாக்டர் சரவணனைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெற்றுள்ளனர். அவரது அறிவுறுத்தலின்படி மட்டக்களப்பிலுள்ள கோப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோத அது ‘சாதாரண காய்ச்சல்’ என்று கூறி இரண்டு மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஆனால் அன்றிரவு காய்ச்சல் தீவிரமடைந்ததை அடுத்து மருத்துவரின் அறிவுறுத்தலின்படி அரசு மருத்துவமனையின் 7-ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கும் பலமுறை இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டும் அது ‘சாதாரண காய்ச்சல்’ என்றே மருத்துவர்களால் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினருக்கு எவ்வித அறிவித்தலும் இன்றி அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளார். அங்கு ‘டெங்கு அன்டிஜன்’ பரிசோதனை செய்வதற்கான வசதிகள் அல்லது இயந்திரங்கள் இல்லை எனக் கூறி வெளி ஆய்வகத்தில் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து கணவர் சொந்த முயற்சியில் இரத்த மாதிரியை எடுத்துச் சென்று தனியார் ஆய்வகத்தில் பரிசோதித்ததில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரிப்போர்ட்டைப் பார்த்த பின்னரே அது டெங்கு காய்ச்சல் என்பதை மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ‘சாதாரண முறையிலேயே பிரசவம் நடக்கும்’ என மருத்துவர்கள் உறுதியளித்தவாறே பிரசவமும் நடந்துள்ளது. குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் 21-ஆம் திகதி மாலை வரை ஜெயப்பிரியா தனது குடும்பத்தினருடன் நலமாகப் பேசியுள்ளார்.

ஆனால் அன்றிரவு திடீரென அவருக்குக் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினரிடம் எவ்வித அனுமதியோ ஒப்புதல் கையெழுத்தோ பெறாமல் நள்ளிரவில் மருத்துவர்களால் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மறுநாள் காலையில் குடும்பத்தினர் பார்க்கச் சென்றபோதே இந்த விபரம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின் பெண்ணின் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டிருந்த ஜெயப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

‘எனது மனைவியின் பிரசவத்தின் போது அங்கிருப்பேன் என்று உறுதியளித்த டாக்டர் சரவணன், பிரசவத்தின் போது அங்கு இல்லை’ என்றும் ‘கர்ப்ப காலத்தின் 10 மாதங்களில் 12 முதல் 13 முறை தனியார் முறையில் ஸ்கேன் செய்த அறிக்கைகள் சிகிச்சைக் குறிப்புகள் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் முக்கிய ஆவணமான ‘ஏ-கார்ட்’ போன்ற எதனையும் மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் ஒப்படைக்க மறுத்து மறைத்து வருகிறது’ என்றும் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

‘எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்’ எனக் கண்ணீருடன் குறிப்பிட்ட அவர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும்,  ஒரிஜினல் மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.