Main Menu

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு

தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் விரிவான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளில் முன்னிலை வகிக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருடன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உள்நாட்டு தொழில்துறையினரை வலுப்படுத்துவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும் என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டிலுள்ள சாத்தியக் கூறுககளை அடையாளங் கண்டு அவற்றை வெற்றிகொள்ள அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து தொழில்முனைவோருக்கும் அழைப்பு விடுத்தார்.

இப்பணியை வெற்றிகொள்வதற்கான தமது முன்மொழிவுகள் மற்றும் இத்துறையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையொன்றை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக அடுத்த ஆண்டில் மூலதனச் செலவாக 2 டிரில்லியன் ரூபாவை ஒதுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் ஏற்படும் டொலர் தேவையை ஈடுசெய்ய ஏற்றுமதித் துறையின் அதிகபட்ச பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்காக தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய விரிவான பங்களிப்பு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

தற்போது இலங்கையின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி வருமானத் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் வருடத்திற்கு 05 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும், தற்போது சுமார் 500 மில்லியன் டொலர்களாக உள்ள மின் மற்றும் இலத்திரனியல் துறையின் ஏற்றுமதி வருமானத்தை 2 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளில் இலங்கையை ஒரு உலகளாவிய வர்த்தகநாமமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இந்த இரண்டு துறைகளுக்கும் தொடர்பான உயர்தர தொழிலாளர் படை இலங்கையில் உள்ளதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இத்துறைகளுக்கு தொடர்பான தொழில்நுட்ப பாகங்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்கள், துறைமுக நகரத்தை அண்டிய நிறுவனங்கள் வங்கி முறைமையுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதில் உள்ள தடைகள், உள்நாட்டு வர்த்தகர்களின் உற்பத்திகளை உள்நாட்டு சந்தையில் ஊக்குவிப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் உட்பட இத்துறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது முகங்கொடுக்கும் சவால்கள் குறித்து இதன் போது வர்த்தகர்கள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அத்தடைகளை நீக்குவது உள்ளிட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கைத்தொழில்துறையினரின் பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகளை நேரடியாக பெற்றுக்கொள்வதற்கும் அவற்றிற்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இத்துறைகளில் வசதிகளை விரிவுபடுத்துவதற்காக அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதற்கிடையில், மெய்நிகர் விசேட பொருளாதார வலயம் (Virtual Special Economic Zone) மற்றும் தரவு மையத்தை ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) நடவடிக்கைகளுக்கு தேவையான இலத்திரனியல் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் உள்ள சுங்கத் தடைகளை நீக்குவதற்கு ”Green Channel” போன்ற முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள், Cloud மற்றும் SaaS (Software as a Service) போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு வெளிநாட்டு கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது உள்ள கடன் அட்டை கட்டுப்பாடுகள் மற்றும் வங்கி முறைமையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு விளக்கிய டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இத்துறையின் வல்லுநர்கள் வெளிநாடு செல்வதை தடுப்பதற்கு மாற்று நிவாரணங்களை வழங்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.