Main Menu

தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிபர்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசாங்கம்!

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சில செல்வாக்குமிக்க அமைப்புகள் உட்பட பல தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

சில குழுக்கள் 2014இல் தடை செய்யப்பட்டன, எனினும் அவை 2015இல் அரசாங்கத்தால் பட்டியலிடப்படவில்லை.

இந்த நிலையில், 2012ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண் 1 (4) இன் கீழ் அவை தடை செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு – அவுஸ்ரேலியா, உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்பன அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ளன.

குறித்த அமைப்புகளை தடை செய்ய வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன கையெழுத்திட்டுள்ளார்.

இதேவேளை, ஜி.டி.எஃப் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, மலேசியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த பல தனிநபர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளது.

முன்னாள் அரசாங்கம் சில புலம்பெயர் குழுக்கள் மீதான தடையை நீக்கிய பின்னர், அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...