Main Menu

சஜித் ஜனாதிபதியாகியிருந்தால் 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத் தந்திருப்பார் – திகாம்பரம்

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிருந்தால் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக் கொடுத்திருப்போம் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

எனினும் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ளமையினால், அவருக்கு ஆதரவு வழங்கிய தரப்பு உடனடியாக ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அக்கரப்பத்தனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம்.

மேலும் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். ஆனால் இந்த புதிய ஆட்சி வந்ததன் பிறகு மலையக மக்களுக்கு எந்தவிதமான அபிவிருத்தி வேலைகளும் இடம்பெறவில்லை. எதிர்காலத்திலாவது அபிவிருத்தி ஏதும் இடம்பெறுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எதிர்வரும் பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை பொருத்தவரையில் மக்கள் நிச்சயமாக தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கு கூடுதலான வாக்குகளை அளித்து அமோக வெற்றியை பெற்று தருவார்கள் என நம்பிக்கை உள்ளது” என மேலும் குறிப்பிட்டார்.

பகிரவும்...