Main Menu

உக்ரைன்- மோல்டோவா நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து?

ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் போது, உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகின்றது.

இதன்போது, ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளராக விண்ணப்பித்திருக்கும் உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகள் வேட்பாளராக அங்கீகரிக்கப்படவுள்ளன.

நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

இந்தநிலையில் உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே நேரடியாக இராணுவ உதவி செய்ய முடியும். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும். உக்ரைன் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி விண்ணப்பித்திருந்தது.

இந்த நிலையில், அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மோல்டோவா நாட்டுக்கும் இன்று வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது.

பகிரவும்...