Main Menu

ஈகையைக் கொண்டாடி மகிழும் பெருநாள்

ஒரே பண்டிகையை வெவ்வேறு நாடுகளில் பல்வேறு விதமாகக் கொண்டாடுவார்களென்றால் அது ஈகைத் திருநாளாகத்தான் இருக்கமுடியும்.

ஈகைத் திருநாளை இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டாடுவர். தங்களது புலன்களின் கட்டுப்பாட்டை  முழுமைப்படுத்திவிட்ட மகிழ்ச்சியில் கொண்டாடுவர். தங்களால் நோன்பு ஏற்க முடிந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டாடுவர். பல நாட்கள் மனஸ்தாபங்களை மகிழ்ச்சியான தினத்தில் மறந்துவிட வேண்டுமென்று நட்பு பாராட்டும், உறவை மேம்படுத்தும் தினமாகக் கொண்டாடுவர். தனது மகிழ்ச்சியில் மற்றவர்களைப் பங்கேற்க அழைத்துச் சகோதர சமுதாய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அகம் மகிழ்ந்து விருந்து படைத்துக் கொண்டாடுவர். அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களைத் தமது சந்தோஷத்தில் இணைத்துக் கொண்டு கொண்டாடுவர்.

மனம் மற்றும் உடல் கட்டுப்பாட்டுக்கான முப்பது நாள் நோன்பு பயிற்சி முடிந்து தொழுகைக்கு முன்பு கட்டாயமாக ஃபித்ராவை அதாவது தான் சாப்பிடும் ஒருநாளுக்குத் தேவையான அளவு (சராசரியாக இரண்டரை கிலோ) அரிசியையோ, கோதுமையையோ தானமாகத் தந்த பிறகே ஈகைத் திருநாளுக்கான தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இந்த வகையான தானத்தை ஆரம்பிக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் கடமை. ஆதலால் ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் ஃபித்ரா அரிசியையும் நான்கு மடங்காகவே தர வேண்டும். அதாவது ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியமாகும். இவ்வகைத் தர்மம் ஏழைகளுக்கு உணவாகும், நோன்பாளிகளைத் தூய்மைப்படுத்தவும், நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமையும். நோன்பு நோற்க முடியாதவர்கள் சார்பில் கொடுக்கப்படும் ஃபித்ரா ஏழைகளுக்கு உணவளித்த நன்மை கிடைக்கும்.

இந்தத் தானத்தை மிகவும் வசதிப் படைத்தவர்கள்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தனக்கு ஒருவேளை உணவு இருந்தால் அதில் பங்கு வைத்துத் தானம் செய்ய இயன்றாலும் செய்யலாம். கடன் இல்லாதவர்கள் இவ்வகையான தானம் செய்வது சிறப்பானது. ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி, அதையே பல்லாண்டுகளுக்கு முன்பாக வலியுறுத்தும் விதமாக, இருப்பதைப் பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்டதுதான் ஸகாத்தும், ஹதியாவும், ஃபித்ராவும்.

ஸகாத் என்பது எல்லா முஸ்லிம்களுக்கும் கடமையான தர்மமாகும். இஸ்லாத்தில் மூன்றாவது தூணாக ஸகாத் கருதப்படுகிறது. ஸகாத் என்றால் தூய்மையடைதல் என்ற பொருளையும் தருகிறது. இது உளத்தூய்மையைக் குறிக்கிறது. பொருளீட்டும் நபருக்கு அந்தப் பொருளின் மீதான காதலை முறியடித்து, தன் சம்பாத்தியத்திலிருந்து ஒரு பங்கை தானமாகக் கொடுத்து அதில் கிடைக்கும் மனநிறைவை ஏற்படுத்துவதே ஸகாத்தின் நோக்கமாகும்.

“அல்லாஹ் வட்டியை (அதில் எந்தப் பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; தன் கட்டளையை நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை” என்ற திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 276-வது வசனம் வட்டியால் அழிவும், தர்மத்தால் நன்மையும் ஏற்படும் என்று நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.

ஸகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும். பெரும்பாலும் ஈகைத் திருநாளின் போதே அந்த வருடத்திற்கான ஸகாத்தை செலுத்திவிடுவதே வழக்கத்தில் உள்ளது. நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என ஸகாத் கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். ஃபித்ராவும் ஹதியாவும் கையேந்துபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஸகாத் என்பது சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள, அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும் தாழ்ந்து செல்லும் துர்பாக்கியம் நிகழ்வதைக் காக்கும் கவசமாகிறது ஸகாத்.

ஈகைத்திருநாள் கொண்டாட்டம் என்பது கொடுப்பதும் குதூகலிப்பதும்.

பகிரவும்...