Main Menu

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜெயசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராக பதிவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பிரேமலால் ஜெயசேகராவுக்கு நாடாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியது.

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவிட்டது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...