“அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ வழக்கு பாயும்” – தவெகவுக்கு டிடிவி எச்சரிக்கை
“அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால், சிபு சோரன் வழக்கு போல கட்சித்தாவல் சட்டம் பாயும்.” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எச்சரித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், “தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறோம். இன்று உலகமே ஒன்று என்ற சூழல் உருவாகிவிட்டது. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. எனவே மூன்றாவது மொழியை படிப்பதில் தவறில்லை. இந்த தேர்தலில் மாற்றம் வேண்டும் என்ற பெயரில் வேட்பாளர் கூட யாரென்று தெரியாமல் தவெகவுக்கு வாக்களித்துவிட்டனர். நல்ல வேளை தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மையை கொடுக்காமல் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளனர்.
2006ல் விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததால், திமுக மைனாரிட்டி ஆட்சியமைத்தது. தவெகவை எதிர்த்து தான் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது, அவர்கள் எப்படி இப்போது தவெகவை ஆதரிக்கிறார்கள். விசிக, இடதுசாரிகள் வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர். தவெக அரசு பெரும்பான்மை இல்லாமல் ஊசலாட்டத்தில் உள்ளதால் தான், அமமுகவின் எம்எல்ஏவை அபகரித்துள்ளனர்.
நாங்கள் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் உள்ளோம். மன்னார்குடி எம்எல்ஏவுக்கு எதாவது தருவதாக சொல்லித்தானே தவெகவுக்கு அழைத்துள்ளீர்கள், அது குதிரை பேரம் தானே. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், உறுதியாக சிபிஐ விசாரணை கோருவோம். அதன்பின்னர் இந்த ஆட்சிக்கு கஷ்டகாலம் தான். இடதுசாரிகள், விசிக இன்னும் ஆறு மாதங்கள் தாங்குவார்களா?. எனவே தவெக ஆட்சியின் ஆயுள்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால், சிபு சோரன் வழக்கு போல கட்சித்தாவல் சட்டம் பாயும். தவெக அமைச்சர்கள் பற்றி வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது. ரீல்ஸை நம்பி மட்டும் ஆட்சி நடத்த முடியாது.
திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்தது. அதுபோல அதிமுக தலைவர்களும் பொறுமை காக்க வேண்டும். எனவே அதிமுக தொண்டர்கள் பெயரை சொல்லி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தால் வரலாறு அவர்களை மன்னிக்காது. எம்ஜிஆர் தொடங்கிய, ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை விஜய் அழிக்கப்பார்க்கிறார் என்பதே உண்மை. அதற்கு யாரும் பலியாக வேண்டாம். சட்டப்படி பழனிசாமி தான் பொதுச் செயலாளர், அவருக்கு தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது.
