ஒக்ஸிஜன் செயலிழப்பால் 7 நோயாளிகள் உயிரிழப்பு – ஜோர்டானின் சுகாதார அமைச்சர் பணிநீக்கம்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் செயற்பாடு செயலிழந்தமையால் ஏழு பேர் இறந்ததை அடுத்து ஜோர்டானின் சுகாதார அமைச்சர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் அம்மானுக்கு மேற்கே புதிய அரச வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை, மகப்பேறு மற்றும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெறும் பிரிவுகள் ஒக்ஸிஜன் செயலிழப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தை அடுத்து இறந்தவர்களின் உறவினர்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தை அடுத்து ஜோர்டானின் சுகாதார அமைச்சரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இதற்கு தனது அரசாங்கம் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் பிரதமர் பிஷர் அல் கஸ்வானே தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பரவும் புதியவகை கொரோனா வைரஸ் மாறுபாட்டை எதிர்கொள்ள, கடந்த வாரம் கடுமையான நடவடிக்கைகளை ஜோர்டான் அறிவித்தது.
சுமார் 10 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஜோர்டானில் 385,533 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 5,224 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.