Main Menu

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாட்டில் தளர்வு!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கைக்கு வருகைதரும் பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு, பயணத்துக்கு முன்னரான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டுக்கு வருகை தருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுவதோடு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை உடன் வைத்திருத்தல் அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு முதலாவது தடுப்பூசி மாத்திரம் செலுத்தப்பட்டிருந்தாலும் அது முழுமையான தடுப்பூசி ஏற்றமாக கருதப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கடந்த 6 மாதங்களுக்குள் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அதற்கான பரிசோதனை ஆவணங்களுக்கு முதலாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றிருத்தல் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத ஏனையோர் 72 மணித்தியாலங்களுக்குள் பெறப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை உடன் வைத்திருத்தல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...