முல்லைத்தீவில் மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
பிரான்சில் இருந்து இயங்கும் ரி.ஆர்.ரி தமிழ் வானொலியால், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை அவர்களிடம் சேர்ப்பிக்கும் நிகழ்வவு இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு நீராவிப்பிட்டியில் நடைபெற்றது.
வன்னிக்கான மாற்றுவலுவுள்ளோர் புனர்வாழ்வு அமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜீவராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் 210 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு கேதீஸ்வரன் என்பவரின் மகளின் கண்சிகிச்சைக்காக ரூபா 25000 வும் வழங்கப்பட்டது.
குறித்த இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்களான திரு.து.ரவிகரன், திரு.சி.சிவமோகன், திருமதி மேரிகமலா குணசீலன், விரிவுரையாளர் ஜெகன், முல்லைமாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தனுராஜ் ஆகியோரும் மாற்றுத்திறனாளிகள், அவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஒரு மாற்றுத்திறனாளி பாடிய பாடலில், “எங்களை உங்களுக்கு தெரியாதா? இந்த உலகுக்கு எம்மைப் புரியாதா?” என்ற வரிகள் பலரின் கண்களில் நீரை வரவழைத்தது.
புலமைப்பரீட்சையில் 154 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த செல்வி பவதாரணி தன்னுடைய இலட்சியம் வைத்தியவராவதே என்றும், 140 புள்ளிகளைப்பெற்ற செல்வி விதுசிகா தன்னுடைய இலட்சியம் பொறியலாளர் ஆவதே என்றும் கூற பலரும் அவர்களை வாழ்த்தினர்.
அங்கு உரையாற்றிய பலரும் ரி.ஆர்.ரி தமிழ் வானொலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, இவ் உறவூகளின் துயர் துடைக்க அனைவரும் முன்வரவேண்டும் என்பதை மையப்படுத்தி கருத்துக்களைத் தெரிவித்தனர்.