Main Menu

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் என்றும், இப்பிரச்சினைக்கு விரைந்து நிரந்த தீர்வுகாணவேண்டும் எனவும் மத்திய,மாநில அரசுகளுக்கு அரசியல்தலைவர்கள் வலியுறுத்தியுள் ளனர்.

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்தமீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்குபல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 69 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்து வருகிறது.

மீனவர் வாழ்வாதாரம்… தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினருடைய தாக்குதலுக்கு ஆளாவதை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய பாஜக அரசுஎந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கான உரிய தீர்வுகள் காணப்படாத வரை தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே இருக்கும்.

பாமக தலைவர் அன்புமணி: தங்களுக்கு உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைதுசெய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொண்டு, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறல் களை கட்டவிழ்த்து விடுகிறது.

இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகும். இலங்கையின் இந்த சீண்டல்களை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. 40 ஆண்டுகளாகத் தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக்கவும், மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சென்றதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல்செய்ததும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இனியும் இது போன்ற நடவடிக்கைகள் தொடரக்கூடாது. எனவே மத்திய அரசு, உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்.

ஐஜேகே பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன்: கடலில் மீன்பிடிக்கும்போது இந்தியா இலங்கை கடல்பகுதி மிக குறுகலாக இருப்பதால் எங்கே சர்வதேச கடல் எல்லை இருக்கிறது என்பதை தமிழக மீனவர்களால் மிக துல்லியமாக கணிக்கமுடிவில்லை. இதனை2 நாடுகளும் உணர வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வாக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகத்தை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.

பகிரவும்...