ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் இஸ்ரேலிய குடியிருப்புகளை விஸ்தரிப்பது போர்க் குற்றம் – வோல்கர் டர்க்
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிராந்தியங்களில் இஸ்ரேலிய குடியிருப்புகளை விஸ்தரிப்பது போர்க் குற்றமாகும் என ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.
ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடந்தவாரம் அளித்த அறிக்கையொன்றிலேயே வோல்கர் டர்க் இவ்வாறு கூறியுள்ளார்.
மேற்குக் கரையின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு நிர்மாணங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன என அவர் கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் குடியிருப்புகளை உருவாக்குவதும் விரிவாக்குவதும் இஸ்ரேல் தனது சொந்த மக்களை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடமாற்றுவதற்கு சமமாகும்.
இது போர்க் குற்றத்துக்கு ஒப்பானது. இதில் சம்பந்தப்பட்டவர்களை குற்றப் பொறுப்பாளிகளாக்கக் கூடும் என அவர் கூறினார்.
மேற்குக் கரையின் மாலே அடுமின், இப்ரத், கேதார் பகுதிகளில் மேலும் 3,476 வீடுகளை நிர்மாணிக்கும் இஸ்ரேலின் திட்டமானது சர்வதேச சட்டங்களுக்கு முற்றிலும் முரணானதாகும் என அவர் கூறினார்.
மேற்படி யூதக் குடியிருப்புகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கு ஸ்பெய்ன், பிரான்ஸ் ஆகியனவும் கடந்த வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்திருந்தன.