Main Menu

பூகோள புலனாய்வு அமைப்புகளின் விளையாட்டுக் களமாகும் சிறிலங்கா!

இந்திய மாக்கடலில் சீனா தனது கடல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் ஆபிரிக்காவுடனான வளர்ந்து வரும் தனது வர்த்தகத்தை உறுதிப்படுத்தவும் தடங்கலுமற்ற பெற்றோலிய வழங்கலை உறுதிப்படுத்துவதற்கும் சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் தேவைப்படுகிறது.

எனினும் சிறிலங்காவைப் பொறுத்தளவில் இது அடுத்து வரும் தலைமுறையினர் வரை தொடரக்கூடிய பேரழிவாக உள்ளது.

சிறிலங்கா போன்ற நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற நாடொன்றில் அரசியல்வாதிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதுடன் அதிகாரத்துவ ஊழலிலும் ஈடுபடுகின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டமானது பல பில்லியன் டொலர் கடனில் மேற்கொள்ளப்பட்டதுடன் இது அவசியமற்றதொரு திட்டமாகவும் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமாகவும் காணப்படுகிறது.

1979 டிசம்பர் மாதம், அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகள் மத்திய கிழக்குடன் யுத்தம் புரிவதில் தீவிரம் காண்பித்தன. ஆபிரிக்க நாடுகளுடன் பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டதன் மூலமும் சீனா தனது உற்பத்திகளை விற்பதற்கான சந்தை வாய்ப்புக்களைத் தேடிக் கொண்டதற்கும் அப்பால் ஆபிரிக்காவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததன் மூலம் சீனாவானது ஆபிரிக்க நாடுகளுக்குள் நுழைய ஆரம்பித்த அதேவேளையில் பெரியதொரு இஸ்ரேலை உருவாக்குவதே இந்த யுத்ததின் நோக்காக இருந்தது.

இதன் விளைவாக, ஆபிரிக்காவுடனான இஸ்ரேலின் வர்த்தகம் 2002ல் பத்து பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்ததுடன் 2006ல் இந்தத் தொகை 200 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது. சீனாவின் நான்கு ரில்லியன் டொலர் வர்த்தகப் பொருட்கள் மற்றும் நாளாந்தம் ஏழு மில்லியன் பரல்கள் பெற்றோலியமும் இந்திய மாக்கடலின் ஊடாகவே கொண்டுசெல்லப்பட்டது. இதனால் இந்திய மாக்கடலானது சீனாவிற்கு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

எனினும், மலாக்கா நீரிணையை விரோத சக்திகள் தடைசெய்து விடுவார்களோ என்கின்ற அச்சம் சீனாவிற்கு உள்ளது. இதனால் சீனாவானது தனது நீண்ட கால விசுவாசத்திற்குரிய நட்பு நாடான பாகிஸ்தானுடனான உறவை மேலும் பலப்படுத்தியுள்ளதுடன் இந்திய மாக்கடலின் ஊடாக மாற்று வர்த்தகப் பாதையையும் உருவாக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதைத் திட்டத்தின் கீழ் 46 பில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

இத்திட்டமானது சீனா மற்றும் பாகிஸ்தானை விரைவான கடல் பாதையின் ஊடாகத் தொடர்புபடுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் சீனாவானது தெற்குப் பட்டுப்பாதை, மத்திய ஆசியப் பட்டுப்பாதை, 21ம் நூற்றாண்டிற்கான கடலோரப் பட்டுப்பாதை மற்றும் சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை போன்ற திட்டங்களை ஒன்றிணைத்து வலைப்பின்னல் நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

இது சீனாவின் ஒரு அணை, ஒரு பாதை எண்ணக்கருவிற்கு முக்கியமானதாகவும் ஆசிய மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 60 நாடுகளை இணைக்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது.

Hambantota harbor

இதில் சில திட்டங்கள் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக பேர்சியன் வளைகுடாவில் பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தை பாரிய நெடுஞ்சாலை மற்றும் தொடருந்துப் பாதைகளின் வலைப்பின்னலின் ஊடாகத் தொடர்புபடுத்தும் மூலோபாய முக்கியத்துவத்தை சீனா கொண்டுள்ளது. இதன் மூலம் துறைமுகங்கள், கட்டுமானத் திட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதுடன் பெற்றோலிய மற்றும் எரிவாயுக் குழாய்களை ஏற்றுமதி செய்வதும் சீனாவின் நோக்கமாகும்.

இது ஒரு தரைத் தொடர்புப் பாதையாகும். இதன் மூலம் விரைவான போக்குவரத்தையும் மேற்கொள்ள முடியும். குறிப்பாக 10,000 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வளைகுடாச் சந்தைக்கான போக்குவரத்து சீனாவிற்கு இலகுவாக்கப்படுவதுடன் இப்பிராந்தியத்தின் பூகோள – அரசியலிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

சோவியத் யூனியன் ஏன் தனது படையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது என்பதற்கான முக்கிய காரணம் என்ன என்பதை எவரும் மறந்துவிட முடியாது. அதாவது பேர்சியன் வளைகுடாவில் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதே சோவியத் யூனியனின் நோக்காக இருந்தது. இதேபோன்றே சீனாவும் தனது சொந்த மூலோபாயத்தை நிலைநிறுத்துவதற்காகவே இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி வருகிறது.

இதற்காக இந்திய மாக்கடலில் அமைந்துள்ள பாகிஸ்தான், சிறிலங்கா மற்றும் பங்களாதேஸ் போன்ற தனது நட்பு நாடுகளின் துறைமுக அபிவிருத்தியில் சீனா பங்கெடுத்துள்ளது. இதற்காகவே சீனா, சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தனது அதிகாரத்தைச் செலுத்த முற்படுகிறது. இதற்காக இலங்கையர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

தாய்லாந்தின் க்ராவிலுள்ள இஸ்த்மஸ்ஸிற்குக் குறுக்காக கால்வாய் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தை சீனா கொண்டுள்ளது. இதன்மூலம் இந்திய மக்கடலுடன் சீனாவின் பசுபிக் கரையோரத்தை இணைத்து பனாமா கால்வாயுடன் இணைப்பை ஏற்படுத்த முடியும் என சீனா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆசியா மீதான தனது இருப்பை சமப்படுத்திக் கொள்ள முடியும் என சீனா கருதுகிறது.

அத்துடன் சீனா தனது கடற்படையின் நடவடிக்கையை இந்திய மாக்கடலில் விரிவுபடுத்துவதுடன் கிழக்கு ஆபிரிக்கா தொடக்கம் யப்பான் மற்றும் கொரியக் குடாநாடு வரை தனது வர்த்தக நகர்வுகளையும் விரிவுபடுத்த முடியும் எனக் கருதுகிறது. இதேபோன்று இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் பல்வேறு உதவிகளை வழங்குவதுடன் பல்வேறு வர்த்தக மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதுவும் சீனா தனது மூலோபாய இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகும்.

இந்திய மாக்கடல் மீதான இந்தியக் கடற்படையின் செல்வாக்கிற்கு இணையாகத் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக சீனா பல மாற்றுப் பாதைகளை அமைத்து வருகிறது. இந்தியாவானது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்ததாக உலகின் மிகப் பெரிய மூன்றாவது நாடாக வளர்ந்து வரும் இந்தியா, இந்திய மாக்கடல் மீதான சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.

இதனால் இந்தியக் கடற்படையின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக சீனா பல மாற்றுப் போக்குவரத்துப் பாதைகளை அமைத்து வருகிறது.

hambantota-agreement

பாகிஸ்தானின் ஒரேயொரு கரையோரப் பாதையானது இந்திய மாக்கடலில் அமைந்துள்ளது. இந்தப் பாதை வர்த்தக மற்றும் சக்தி வழங்கல்களுக்கு முக்கியமாக உள்ளது. பாகிஸ்தானிற்கு அருகிலுள்ள பிரதேசங்களில் இந்தியாவின் ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டிய தேவையும் பாகிஸ்தானுக்கு உள்ளது. ஈரான் தொடக்கம் தாய்லாந்து வரை கடல் மற்றும் தரைவழிகளின் ஊடாகா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதே இந்தியாவின் நோக்காகும்.

இந்நிலையில் சீன-பாகிஸ்தானிய பொருளாதாரத் திட்டத்தை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆப்கானிஸ்தான் தொடக்கம் தாய்லாந்து வரையான கரையோரத்தில் இந்தியா தனக்கென சொந்தமான இலக்கைக் கொண்டுள்ளதாக பா.ஜ.க தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்திருந்தனர்.

இந்தியா மற்றும் சீனா ஆகியன பாரிய கடல் சார் மற்றும் பொருளாதார சக்திகளாக வளர்ந்து வருவதால் இவ்விரு நாடுகளையும் இந்திய மாக்கடலில் எதிர்கொள்வதென்பது அமெரிக்காவிற்கு மிகப் பாரிய சவாலாக உள்ளது. தென்சீனக் கடல் மற்றும் கிழக்குச் சீனக் கடலில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதைத் தடுப்பதற்காக சீனாவிடமிருந்து அதன் நட்புநாடுகளை விலகச் செய்ய வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு உண்டு.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தை தனியொரு நாடு அதிகாரம் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. ஏனெனில் இது தனது நீண்ட கால பொருளாதார நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் அதிகாரச் சமநிலையைப் பேணுவதிலும் குழப்பத்தை விளைவிக்கும் எனவும் அமெரிக்கா கருதுகிறது. இதனால் அமெரிக்கா தனது பொருளாதார மையத்தை மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாற்றி வருகிறது.

இந்திய மாக்கடலை எந்தவொரு ஆசிய நாடும் தனது தனித்துவமான அதிகாரத்திற்குள் வைத்திருந்தால் ஆசியாவுடனான வர்த்தகச் சமநிலையைப் பேணுவதில் குழப்பத்தை விளைவிக்கும் என்பது அமெரிக்காவின் எண்ணமாகும். குறிப்பாக மலாக்கா நீரிணை, ஹோர்மஸ் நீரிணை மற்றும் மண்டேப் நீரிணை ஆகியன உட்பட இந்திய மாக்கடலின் மீதான செல்வாக்கு தனியொரு நாட்டிற்குச் சொந்தமானதாக இருக்கக்கூடாது என அமெரிக்கா கருதுகிறது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் பஹ்ரெய்ன், டிஜிபோட்டி, டியாகோ கார்சியா போன்றவற்றிலும் அமெரிக்கக் கடற்படையின் பிரசன்னம் காணப்படுகிறது. அமெரிக்காவானது இந்திய மாக்கடல் கரையோரத்தின் வழியாக ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுடன் கடல்சார் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுகிறது.

டெல்அவிவ், புதுடில்லி அரசாங்கங்களுடன் அமெரிக்காவின் உறவுநிலை தற்போது வளர்ச்சியடைந்து வரும்நிலையில், இந்திய மாக்கடலில் இந்தியா தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என உந்துசக்தி வழங்குகிறது. இதை சீனா மற்றும் பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் சீனா மற்றும் பாகிஸ்தான் தமக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்தி வருகின்றன.

குவடாரில் மையப்படுத்தப்பட்டுள்ள சீன-பாகிஸ்தானிய மூலோபாய கடல்சார் கூட்டு நடவடிக்கையானது இந்திய மாக்கடலில் செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்கின்ற இந்திய-அமெரிக்காவின் குறிக்கோளுக்கு ஊறுவிளைவிக்கும்.

இந்திய மாக்கடல் மீது ஐரோப்பாவும் மிகப் பலமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களைக் கொண்டுள்ளது. இந்திய மாக்கடலில் காணப்படும் பெறுமதி மிக்க கடல்படுக்கைகளை அகழ்வதற்கான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான பணிகளில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபடுகின்றன. மேலும் இந்திய மாக்கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தையும் சில ஐரோப்பிய நாடுகள் கொண்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இந்திய மாக்கடல் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் தமது பொருளாதார மற்றும் இராணுவ வளங்கள், அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய-இஸ்ரேலிய யுத்தங்களால் சிதைவுறலாம் என அச்சமுறுகின்றன.  இவ்வாறான காரணங்களால் இந்திய மாக்கடலானது அரசியல், மூலோபாய மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையமாக மாறியுள்ளதாக ஆய்வாளர் சல்மான் றபி செய்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மாக்கடல் மீதான அதிகாரத்துவ நாடுகளின் மரபுசார் மற்றும் அணுவாயுதக் கப்பல்களின் பிரசன்னமானது அதிகரித்து வருவதே இதற்கான காரணமாகும். இந்திய மாக்கடலில் தமது பொருளாதார நலன்களை நிலைப்படுத்துவதற்கும் பாரிய வர்த்தகப் பங்காளிகளைத் தக்கவைத்திருப்பதற்கும் சீனா மற்றும் இந்தியா ஆகியன பாரிய அதிகாரத்துவப் போட்டிக்குள் நுழைவதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தை தனியொரு நாடு அதிகாரம் செய்வதற்கு முடியாது எனவும் இதனால் இவ்விரு நாடுகளும் தமது இலக்குகளை அடைவதற்கு பல்வேறு நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதனால் இந்திய மாக்கடல் மீது செல்வாக்குச் செலுத்த விரும்பும் அதிகாரத்துவ நாடுகள் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமானநிலையத்தை சீனா தனது சொந்தச் சொத்தாகப் பயன்படுத்துவதுடன் அங்கு தனது பிரசன்னத்தை நிலைப்படுத்தியுள்ளதை ஆராய வேண்டிய தேவையுள்ளது.

வழிமூலம்       – sunday times
ஆங்கிலத்தில் – Latheef Farook
மொழியாக்கம்- நித்தியபாரதி

பகிரவும்...