பிளாஸ்மா முறையில் சிகிச்சை அளிக்க டெல்லி அரசு தீர்மானம்!
டெல்லியில் கொரோனா தொற்றால் குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வரவேண்டும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லியும் உள்ளது. இங்கு நாள்தோறும் அதிகரிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா முறையால் சிகிச்சை அளிக்க அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,
கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மட்டும் பிளாஸ்மா முறையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதனை அடுத்து சோதனை முறையில் 4 நோயாளிகளுக்கு செய்யப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை தற்போது பலனளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடந்து அடுத்த 3 நாட்களுக்கு கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்காக கொரோனாவால் குணமடைந்தவர்கள் தங்களது ரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய முன் வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே பிளாஸ்மா முறையில் கொரோனா நோயாளிகளுக்கு கேரள அரசு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது