Main Menu

நிலச்சரிவில் சிக்கி சிதைந்த வெனிசூலா கிராமம்… 22 பேரின் உடல்கள் மீட்பு

வெனிசூலாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் காரகாசில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டிய நிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஏராளமான வீடுகள் சிதைந்தன. வீடுகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 52 பேர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. இடிபாடுகளை அகற்றி காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவால் பல வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அழிந்துவிட்டன. முறிந்துவிழுந்த மரங்கள் தெருக்களில் சிதறிக்கிடந்தன. அத்துடன் வீட்டுப் பொருட்கள் மற்றும் சேதமடைந்த கார்கள் மற்றும் மரங்கள் என அனைத்தும் சேறு மற்றும் குப்பைகளால் மூடப்பட்டிருந்தன. இந்த பெருந்துயர சம்பவத்தைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சமூக வலைத்தளம் வாயிலாக பொதுமக்கள் உதவிகள் வழங்கிவருகின்றனர். வெனிசூலாவில் கடந்த 30 ஆண்டுகளாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் நிலச்சரிவு ஏற்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பகிரவும்...