Main Menu

நளினியை விடுதலை செய்ய முடியாது- உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாதென உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை  உயர் நீதிமன்றத்தில்  ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, “10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை. இதற்கிடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நான் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி இயற்றப்பட்டது.

குறித்த  தீர்மானத்துக்கு இதுவரை தமிழக  ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

எனவே என்னை விடுதலை செய்யாமல் சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால்,  உயர் நீதிமன்றத்தில் என்னை முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும். என்னை விடுதலை செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த  மனு மீதான வழக்கு விசாரணை, நீதிபதிகளான ஆர்.சுப்பையா மற்றும் பொங்கியப்பன் ஆகியோர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் முன்னிலையாகி,  “நளினியை விடுவிக்க கோரிய மனுவை கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு நிராகரித்து உத்தரவிட்டுள்ளது” என்று கூறி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து  இந்த வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி  தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பகிரவும்...